எருவை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எருவை
Arundo donax 3.jpg
எருவை (Arundo donax)
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Poales
குடும்பம்: Poaceae
துணைக்குடும்பம்: Arundinoideae
சிற்றினம்: Arundineae
பேரினம்: Arundo
இனம்: A. donax
இருசொற் பெயரீடு
Arundo donax
L

எருவை (Giant Cane) என்பது செடியினத்தில் ஒருவகைப் புல். புல் என்பது உள்ளே துளை உடைய செடியினம். எருவை என்பது பெருநாணல். வேழம் என்பது சிறுநாணல். இருவகை நாணலையும் இக்காலத்தில் நாணல் என்றும், நாணாத்தட்டை என்றும், கொறுக்காந்தட்டை என்றும், பேக்கரும்பு என்றும் கூறுகின்றனர்.

நாணல்

நாணல் ஆற்றங்கரைகளில் செழித்து வளரும். கிளை இல்லாமல் செங்குத்தாக நேராக வளரும். மூங்கில் போலக் கணுக்கள் கொண்டது. இரண்டு-விரல் அளவு கூடப் பருக்கும். இதனை மூங்கில் போல் வளைக்க முடியாது. மூங்கில் அளவுக்குக் கெட்டித்தன்மை இல்லாதது. மிகவும் இலேசானது. எருவைப் பூ கரும்புப் பூப் போலவே இருக்கும்.

கோரை

கோரை என்பது வேறு தாவரம். அது கணு இல்லாமல் நெல்லம்பயிர் போல வளரும். கோரை பாய் நெய்யப் பயன்படும்.

சங்கப்பாடல்களில் எருவை

குறிஞ்சிநிலப் பெண்கள் குவித்துவிளையாடியதாகக் குறிஞ்சிப்பாட்டு கூறும் 99 மலர்களில் எருவை-மலரும் ஒன்று.[1]
எருவைக் கோலையும் வேரல் என்னும் சிறுமூங்கில்-கோலையும் ஊன்றுகோலாகப் பயன்படுத்துவர்.[2]
மலைநாட்டு ஊர்களில் இது ஊரைச்சுற்றி வளர்ந்திருக்கும்.[3]
ஒற்றையடிப் பாதையின் இரு மருங்கிலும் இது காணப்படும்.[4]
திருப்பரங்குன்றத்தில் இப்பூவின் மணம் கமழ்ந்தது.[5]
மூங்கிலும் எருவையும் மலைத்தாவரம்.[6]
எருமை எருவைப் புல்லை விரும்பி உண்ணும். (இக்காலத்திலும் எருமைகள் வைக்கோலை விடச் சோளத்தட்டைகளையே விரும்பி உண்கின்றன.) [7]
பன்றிகள் தம் தம் மூக்கால் கிண்டிய புழுதியில் இவை செழித்து வளர்ந்தன.[8]
எருவைப் பூக்கள் காயாமல் பூத்திருக்கும்போது வானவில் போலப் பல வண்ணங்களுடன் திகழும்.[9]

இதனையும் பார்க்க

அடிக்குறிப்பு

  1. குறிஞ்சிப்பாட்டு 65
  2. மலைபடுகடாம் 224
  3. எருவை நீடிய பெருவரைச் சிறுகுடி - நற்றிணை 156
  4. எருவை நறும்பூ நீடிய பெருவரைச் சிறுநெறி - நற்றிணை 261
  5. திருப்பரங் குன்றத்தில் எருவை நறுந்தோடு பூக்கும் - பரிபாடல் 19-77
  6. வேய் பயின்று எருவை நீடிய பெருவரை அகம் - நற்றிணை 294
  7. அருவி தந்த நாட்குரல் எருவை, கயம் நாடு எருமை கவளம் மாந்தும் - குறுந்தொகை 170
  8. கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை, விளைந்த செருவில் தோன்றும் - ஐங்குறுநூறு 269
  9. எருவை கோப்ப எழில் அணி திருவில் வானில் அணிந்த வரி ஊதும் பன்மலரால் கூனி வளைந்த சுனை - பரிபாடல் 18-48
"https://tamilar.wiki/index.php?title=எருவை&oldid=11180" இருந்து மீள்விக்கப்பட்டது