திருக்களிற்றுப்படியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திருக்களிற்றுப்படியார் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை விளக்கும் மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று. இவற்றுட் தலை சிறந்ததான சிவஞான போதத்துக்கு முற்பட்ட இந்த நூலை இயற்றியவர் திருக்கடவூரைச் சேர்ந்த உய்யவந்த தேவநாயனார் ஆவார். இந் நூல் நூறு வெண்பாக்களால் ஆனது.[1] இதற்கு 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரை ஒன்று உண்டு.

பெயர்க் காரணம்

இந்நூலாசிரியர் தாழ்ந்த இனத்தவராதலால் முதலில் இவர் செய்த நூல் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆசிரியர் திருவருளை வேண்டி, தன் நூலைத் தில்லை நடராசப் பெருமான் சந்நிதிக்குச் செல்லும் பஞ்சாக்கரப் படியில் (திருக்களிற்றுப்படி) வைக்க, படியின் இரு பக்கமுள்ள கல்யானைகள் உயிர் பெற்றுத் தம் தும்பிக்கையால் அந்நூலை எடுத்து நடராசப் பெருமானின் திருவடியில் வைக்க, அந்நூலின் சிறப்பை உணர்ந்த அடியவர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். அதனாலேயே, அந்நூல் அப்பெயர் பெற்றது என்பது கர்ண பரம்பரையாக வழங்கும் செய்தியாகும்.[2]

பாடல் - எடுத்துக்காட்டு

அம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்ப ரென்றறிக
அம்மையப்ப ரப்பரிசே வந்தளிப்ப -ரம்மையப்பர்
எல்லா வுலகுக்கு மப்புறத்தா ரிப்புறத்தும்
அல்லார்போ னிற்பா ரவர்.

இது திருக்களிற்றுப்படியார் நூலிலுள்ள முதல் வெண்பா.[3][4]

இதன் சொல்பிரிப்பு வடிவம்

அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்று அறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்து அளிப்பர் - அம்மையப்பர்
எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார் போல் நிற்பார் அவர்.

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
  2. டாக்டர் கோமதி சூரியமூர்த்தி எழுதிய “சைவசமய சாத்திரக் கட்டுரைகள் (தொகுதி 3)”, பக்கம்:125.
  3. திருக்களிற்றுப்படியார்
  4. திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், க. வெள்ளைவாரணர் உரை