நாகேஷ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நாகேஷ்
Nagesh2005.jpg
பிறப்புநாகேசுவரன்
(1933-09-27)27 செப்டம்பர் 1933
கொழிஞ்சிவாடி, தாராபுரம், தமிழ்நாடு, இந்தியா இந்தியா
இறப்புசனவரி 31, 2009(2009-01-31) (அகவை 75)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1958-2009
பெற்றோர்தந்தை : கிருஷ்ணன் ராவ்
தாயார் : ருக்மணி அம்மாள்
வாழ்க்கைத்
துணை
ரெஜினா (1957-2002)
பிள்ளைகள்ரமேஷ் பாபு,
ராஜேஷ் பாபு,
ஆனந்த் பாபு
விருதுகள்
  • கலைமாமணி விருது (1974)
  • சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது - நம்மவர் (1994)
  • தமிழ்நாடு மாநில திரைப்பட விருது - சிறப்பு பரிசு - நம்மவர் (1994)

நாகேஷ் (இயற்பெயர் செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஷ்வரன், 27 செப்டம்பர் 1933 - 31 சனவரி 2009) த‌மிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிக‌ராவார். இவர் நகைச்சுவை நடிக‌ராகவும், துணை நடிகர், வில்லனாகவும் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவரின் நகைச்சுவை பாணி ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லூயிஸின் பாணியை ஒத்திருந்ததாகக் கூறப்படுகின்றது.

வாழ்க்கைச் சுருக்கம்

நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். கிருஷ்ணன் ராவ்-ருக்மணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை கிருஷ்ணன் ராவ் கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் உள்ள இரயில் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றிவந்தார். நாகேஷ் அவர்களை சிறுவயதில் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் கிண்டலாக அழைக்கப்பட்டார்.

தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு கோவை பி. எஸ். ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்ததால் அவரது முகத்தில் தழும்புகள் உண்டானது. பின்பு நாகேஷ் கோவையில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, தனது தந்தை பணியாற்றிய இரயில்வே இலாக்காவில் திருப்பூர் இரயில் நிலையத்தில் எழுத்தாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததால் சிறிது காலம் திரைக்கு செல்லும் காலம் வரை அங்கு பணியாற்றிவந்தார். புது வசந்தம், சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆனந்த் பாபு இவரது மகனாவார்.

நடிப்புத் துறையில்

சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால், இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.

1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார்.

கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்.

திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

கதை நாயகனாக

நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன் கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கமல்ஹாசன் உடனான நட்பு

கமல்ஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் இவர் தோன்றினார். அதற்குப் பின் பல கமல்ஹாசன் படங்களில் நாகேஷ் நடித்தார். மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். நாகேஷ் கமல்ஹாசனுடன் நடித்த கடைசிப் படம் தசாவதாரம் ஆகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikilogo.JPG
தமிழர்விக்கி பொதுவகத்தில்,
Nagesh
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://tamilar.wiki/index.php?title=நாகேஷ்&oldid=23802" இருந்து மீள்விக்கப்பட்டது