திருச்சி லோகநாதன்
| திருச்சி லோகநாதன் | |
|---|---|
1951 இல் திருச்சி லோகநாதன் | |
| பின்னணித் தகவல்கள் | |
| இயற்பெயர் | திருச்சி லோகநாதன் |
| பிறப்பு | 24 சூலை 1924 |
| பிறப்பிடம் | திருச்சிராப்பள்ளி, மெட்ராஸ் மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
| இறப்பு | 17 November 1989 (aged 65) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| இசை வடிவங்கள் | திரையிசை (பின்னணிப் பாடகர்), இந்திய பாரம்பரிய இசை, |
| தொழில்(கள்) | பாடகர் |
| இசைத்துறையில் | 1947–1986 |
திருச்சி லோகநாதன் (Thiruchi Loganathan; 24 சூலை 1924 - 17 நவம்பர் 1989) தமிழ்த் திரைப்பட முதல் பின்னணிப் பாடகர். பல திரையிசைப் பாடல்களைப் பாடியவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
திருச்சி மலைக் கோட்டை மாநகரில் நகைத்தொழில் செய்த சுப்ரமணியன் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் லோகநாதன். இவர் பெயரில் உள்ள T என்ற எழுத்து திருச்சிராப்பள்ளியைக் குறிப்பதாகும்.
நடராஜன் என்பவரிடம் முறையாக இசை பயின்றார். சிறுவயதில் ஜி. ராமநாதன் இசையமைத்த பாடல்களை விருப்பமாகப் பாடுவார்.
லோகநாதன் நகைச்சுவை நடிகை சி. டி. ராஜகாந்தத்தின் மகள் ராஜலெட்சுமி என்பவரை மணம் புரிந்தார்.[1] இவர்களுக்கு டி. எல். மகராஜன், தீபன் சக்ரவர்த்தி ('பூங்கதவே தாழ் திறவாய்' என்ற பாடலை நிழல்கள் திரைப்படத்தில் பாடியவர்), தியாகராஜன் என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
திரைப்படங்களில்
இவர் பாடிய முதல் திரைப்பட பாடல் காசினிலே நாங்கள் வாழ்வதே எனத் தொடங்கும் பாடல், 1947 இல் எம். ஜி. ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த முதல் படமான ராஜகுமாரியில் எஸ். எம். சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில் கே. வி. ஜானகியோடு இணைந்து பாடினார். தொடர்ந்து கஞ்சனில் பிச்சைக்காரன் ஆனேன், அத்தை மகளே நில்லாய், நீலவான் நிலவே ஆகிய பாடல்களையும், அபிமன்யுவில் சகாதேவனாக நடித்தும் இருக்கிறார்.
திருச்சி லோகநாதன் பாடிய பாடல்கள்
- கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார்)
- ஆசையே அலைபோலே (தை பிறந்தால் வழி பிறக்கும்)
- அடிக்கிற கைதான் அணைக்கும் (வண்ணக்கிளி)
- என்று தணியும் இந்த சுதந்திர தாகம் (கப்பலோட்டிய தமிழன்)
- உலவும் தென்றல் காற்றினிலே (மந்திரி குமாரி)
- புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே (பானை பிடித்தவள் பாக்கியசாலி)
- வில்லேந்தும் வீரரெல்லாம் (குலேபகாவலி)
- பொன்னான வாழ்வு (டவுன்பஸ்)
பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள்
- பட்டினத்தார் (1962 திரைப்படம்)
குறிப்பிடத்தகுந்த இரண்டு நிகழ்வுகள்
- நகைச்சுவை நடிகர் கே. ஏ. தங்கவேலு வீட்டு நவராத்திரி கொலுவில் மதுரை சோமு பாடிய பாடலை இரசித்து தான் கையில் வைத்திருந்த வெள்ளி வெற்றிலைப் பெட்டியைப் பரிசளித்தார்.
- சிவாஜிகணேசன் நடித்த தூக்குத் தூக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும் வாய்ப்பு வந்தபோது ஒரு பாடலுக்கு ரூ 500 சம்பளம் கேட்டார். தயாரிப்பாளர்கள் சம்பளத்தைக் குறைக்கச் சொல்ல "மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார், அவரை பாடச் சொல்லுங்க" என்று கூறிவிட்டார். திருச்சி லோகநாதன் சுட்டிக்காட்டிய அந்த மதுரைக்காரர் டி. எம். சௌந்தரராஜன் ஆவார்.
மேற்கோள்கள்
- ↑ ஜகந்நாத், கே. (சனவரி 1951). ""ரத்னஜோடி" சி. டி. ராஜகாந்தம்". பேசும்படம்: பக். 118-126.