உண்டவல்லி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அனந்த பத்மநாப சுவாமி

உண்டவல்லி என்பது இந்தியாவில் ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். இங்கு கி.பி.4முதல் 5- ஆம் நூற்றாண்டைச் சார்ந்த குடைவரைகள் உள்ளன. இக்குடைவரைக் கோயில் 4 தளங்களை உடையது. அடித்தளம் முற்றுப்பெறாத நிலையில் காணப்படுகிறது. கூரைகளைத் தூண்கள் தாங்குமாறு குடையப்பட்டுள்ளன. அடித்தளத்தின் மண்டபம் ஏழு தலைவாயில்களைக் கொண்டுள்ளது. [1]

முதலாம் தளம்

அடித்தளத்திற்கும் மேல் உள்ள முதல்தளம் அடித்தளத்தைவிட பெரியது. இங்கு காணப்படும் சிற்பங்கள் யாவும் திருமாலை பற்றியன. இங்கு நான்கு வரிசையாக அமைக்கப்பட்டுள்ள தூண்கள் மேல் கூரையைத் தாங்கி நிற்கின்றன. முதல் தளத்தின் அமைப்பிலிருந்து இத்தளம் பல்லவ அரசர் மகேந்திரவர்மன் காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இரண்டாம் தளம்

இரண்டாம் தளம் 9 மீ. அகலமும், ஏறக்குறைய 17 மீ. நீளமும் உள்ள மண்டபத்தையும், தென்முனையில் 4 மீ. சதுரமான சிறிய அறையையும், வட கோடியில் ஒரு நீண்ட சதுரமான கருவறையையும் கொண்டு விளங்குகிறது. இங்கு அனந்தசயனரின் பெரிய சிலை ஒன்று உள்ளது. நடுமண்டபத்தில் நான்கு வரிசையில் தூண்கள் உள்ளன. இத்தூண்கள் பல்லவர் காலத் தூண்களின் அமைப்பை ஒத்துள்ளன. இங்கு சைவ சிற்பங்கள் சிலவும் காணப்படுகின்றன. எனவே, இக்கோயில் 17 - ஆம் நூற்றாண்டில் சைவர்களின் வழிபாட்டுத்தலமாக விளங்கியிருக்க வேண்டும்.

மூன்றாம் தளம்

மூன்றாம் தளம் முற்றுப்பெறாத நிலையில் உள்ளது. முற்றம் ஒன்று கூரையற்று காணப்படுகிறது. இந்த குன்றிலேயே வேறு சில குடைவரைகளும் காணப்படுகின்றன. அவை அனைத்தும் முற்றுப் பெறாத நிலையில் உள்ளன.

மேற்கோள்

வெளியிணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=உண்டவல்லி&oldid=289039" இலிருந்து மீள்விக்கப்பட்டது