அப்துல் ரகுமான்

அப்துல் ரகுமான் (S. Abdul Rahman, நவம்பர் 9, 1937 - சூன் 2, 2017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர்.[2] எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல்[3] ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

அப்துல் ரகுமான்
இயற்பெயர்/
அறியும் பெயர்
முனைவர்
சை. அப்துல் ரகுமான்
பிறப்புபெயர் அப்துல் ரகுமான்
பிறந்ததிகதி 1937 நவம்பர் 9
பிறந்தஇடம் மதுரை கிழக்குச் சந்தைப்பேட்டை
இறப்பு சூன் 02, 2017 (அகவை 80)[1]
பணி பேராசிரியர்
தேசியம் இந்தியர்
கல்வி கலை முதுவர்
முனைவர்
பணியகம் இஸ்லாமியக் கல்லூரி, வாணியம்பாடி
அறியப்படுவது சர்ரியலிசக் கவிதைகள்
பெற்றோர் மஹி என்னும் சையத் அஹமத் – ஜைனத் பேகம்
பிள்ளைகள் மகன்; மகள்
இணையதளம் கவிக்கோ

1960 இக்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

பிறப்பு

அப்துல் ரகுமான் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் உருதுக் கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத் – ஜைனத் பேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.[4]

கல்வி

அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பெற்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார். அப்பொழுது முனைவர் மா. இராசமாணிக்கனார், ஔவை துரைசாமி, அ. கி. பரந்தாமனார், அவ்வை நடராசன், அ. மு. பரமசிவானந்தம் ஆகிய தமிழறிஞர்களிடம் பயின்றார்.

சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றிய ச. வே. சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

பணி

தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றதும் தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்னும் நாளிதழில் மெய்ப்பு திருத்துநராகச் சிலகாலம் பணியாற்றினார். அப்பொழுது தமிழகத்தில் இருந்த ஐந்து இசுலாமியக் கல்லூரிகளுக்கு [5] விரிவுரையாளர் பதவிக்காக விண்ணப்பித்தார். அவற்றுள் வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் பணியாற்ற அவருக்கு 1961 ஆம் ஆண்டில் வாய்ப்புக் கிடைத்து. அங்கே சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர், எனப் படிப்படியாக உயர்ந்து 1991ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வுபெற்றார். இதில் 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார்.

வக்பு வாரிய தலைவராக

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார்

நூல்கள்

படைத்தவை

வ.எண் ஆண்டு நூல் வகை குறிப்பு
01 1974 பால்வீதி[6] கவிதை
02 1978 நேயர் விருப்பம் கவிதை
03 1985 கரைகளே நதியாவதில்லை கட்டுரை சூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
04 1986 அவளுக்கு நிலா என்று பெயர் கட்டுரை சூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
05 1986 முட்டைவாசிகள் கட்டுரை சூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
06 1986 மரணம் முற்றுப்புள்ளி அல்ல கட்டுரை சூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
07 1987 விலங்குகள் இல்லாத கவிதை கட்டுரை
08 1987 சொந்தச் சிறைகள் வசன கவிதை சூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
09 1989 புதுக்கவிதையில் குறியீடு ஆய்வு முனைவர் பட்ட ஆய்வேடு
10 1989 சுட்டுவிரல் பாடல் முத்தாரத்தில் வெளிவந்த தொடர்
11 1990 கம்பனின் அரசியல் கோட்பாடு ஆய்வு அமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு
12 1995 ஆலாபனை[7] கவிதை சாகித்திய அகாதமி விருது பெற்றது. பாக்யா இதழில் வெளிவந்த தொடர்.
13 1998 பித்தன் கவிதை குங்குமத்தில் வெளிவந்த தொடர்
14 1998 விதைபோல் விழுந்தவன் கவியரங்கக் கவிதைகள் அண்ணா கவியரங்கக் கவிதைகள்
15 1998 முத்தமிழின் முகவரி கவியரங்கக் கவிதைகள் மு. கருணாநிதியைப் புகழ்ந்து பாடியவை
16 1999 பூப்படைந்த சப்தம் கட்டுரை
17 1999 தொலைபேசிக் கண்ணீர் கட்டுரை
18 2003 காற்று என் மனைவி கட்டுரை
19 2003 உறங்கும் அழகி கட்டுரை
20 2003 நெருப்பை அணைக்கும் நெருப்பு கட்டுரை
21 2003 பசி எந்தச் சாதி கட்டுரை
22 2003 நிலவிலிருந்து வந்தவன் கட்டுரை
23 2003 கடவுளின் முகவரி கட்டுரை
24 2003 முத்தங்கள் ஓய்வதில்லை கட்டுரை
25 2004 காக்கைச் சோறு கட்டுரை
26 2004 சோதிமிகு நவகவிதை கட்டுரை
27 2004 மின்மினிகளால் ஒரு கடிதம் கவிதை கஜல் கவிதைகள்
28 2005 தாகூரின் 'சித்ரா' மொழிபெயர்ப்பு
29 2005 ரகசிய பூ கவிதை
30 2005 சிலந்தியின் வீடு கட்டுரை
31 2005 இது சிறகுகளின் நேரம் கட்டுரை சூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
32 2006 இல்லையிலும் இருக்கிறான் கட்டுரை
33 2006 பறவையின் பாதை கவிதை
34 2007 இறந்ததால் பிறந்தவன் கவியரங்க கவிதை முதல் தொகுதி
35 2008 தட்டாதே திறந்திருக்கிறது கட்டுரை
36 2010 எம்மொழி செம்மொழி கட்டுரை
37 2010 பூக்காலம் கட்டுரை
38 2011 தேவகானம் கவிதை
39 கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை கவிதை
40 2013 பாலை நிலா கவிதை
41 நரம்பு அறுந்த யாழ்!: ஈழத்தமிழரின் கண்ணீர்க்கதை பயணக்கட்டுரை

நூலாக வேண்டிய படைப்புகள் / தொடர்கள்

  • முத்தாரத்தில் வெளிவந்த கேள்வி - பதில்
  • கவியரங்கக் கவிதைகள்


பதிக்கப்பட்டவை

  • குணங்குடியார் பாடற்கோவை
  • ஐந்து சிறுகவிதைத் தொகுப்புகள்

விருதுகள்

கவிக்கோ என அழைக்கப்படும் அப்துல் ரகுமானுக்கு பல்வேறு விருதுகள் பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்டன. அவை வருமாறு:

வ.எண் ஆண்டு விருது வழங்கியவர் குறிப்பு
1 1986 கவியரசர் பாரிவிழா விருது குன்றக்குடி அடிகளார்
2 1989 தமிழன்னை விருது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் இவ்விருது புதுக்கவிதைக்காக வழங்கப்பட்டது
3 1989 பாரதிதாசன் விருது தமிழக அரசு
4 1989 கலைமாமணி விருது தமிழக அரசு
5 1992 அக்ஷர விருது அக்னி
6 1996 சிற்பி அறக்கட்டளை விருது கவிஞர் சிற்பி அறக்கட்டளை
7 1997 கலைஞர் விருது தி. மு,க. ஒரு இலட்சம் ரூபாய்
8 1998 ராணா இலக்கிய விருது
9 1999 சாகித்ய அகாடமி விருது சாகித்ய அகாடமி, டெல்லி ஆலாபனை கவிதைத் தொகுதிக்காக வழங்கப்பட்டது
10 2006 கம்ப காவலர் கொழும்பு கம்பன் கழகம், இலங்கை
11 2007 பொதிகை விருது பொதிகை தொலைக்காட்சி, சென்னை
12 2007 கம்பர் விருது கம்பன் கழகம், சென்னை
13 2007 சி. பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு தினத்தந்தி நாளிதழ் ஒரு இலட்சம் ரூபாய்
14 2008 உமறுப் புலவர் விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஒரு இலட்சம் ரூபாய்

மேற்கோள்கள்

  1. வெ.நீலகண்டன். "கவிக்கோ அப்துல் ரகுமான்... உதிர்ந்த மெளனம்! #RIP" (in ta). https://www.vikatan.com/news/celebrity/91141-abdul-rahman-special-article. 
  2. "அப்துல் ரகுமான் – பவள விழா". https://www.jeyamohan.in/80118/. 
  3. "கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புகளில் சமூக சிந்தனைகள்" (in en-US). https://puthu.thinnai.com/?p=32604. 
  4. "அப்துல் ரகுமான் 10" (in ta). https://www.hindutamil.in/news/blogs/87035-10.html. 
  5. (1) உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, (2) சென்னை புதுக்கல்லூரி, (3) வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி, (4) திருச்சி ஜமால் முகமது கல்லூரி (5) இசுலாமியா கல்லூரி, வேலூர்
  6. Akilan, Mayura (2017-06-02). "பால்வீதியில் தொடங்கிய பயணம்... பன்மொழிக் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான்" (in ta). https://tamil.oneindia.com/news/tamilnadu/paal-veedhi-poet-kaviko-abdul-rahman-biodata-284619.html. 
  7. "கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்!" (in ta-IN). https://tamil.indianexpress.com/tamilnadu/kaviko-abdul-raguman-passes-away-chennai/. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அப்துல்_ரகுமான்&oldid=4547" இருந்து மீள்விக்கப்பட்டது