வ. ஜெயதேவன்
வ. ஜெயதேவன் (10 மே 1947 - 4 பெப்ரவரி 2026) ஒரு தமிழ்ப் பேராசிரியர், தமிழ் அகராதியியல் ஆய்வாளர் ஆவார்.[1] இவர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி, பணிநிறைவு பெற்றவர்.[2] தமிழ் அகராதியியல் தொடர்பாகப் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் வெளியிட்டவர். தமிழ்ப் பேரகராதியின் இற்றைப்படுத்தல், விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டார். தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.
வாழ்கை குறிப்பு
சென்னை மாகாணம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின், உப்பிலியாபுரத்தில் 1947 மே 10 அன்று ஜெயதேவன் பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தாவரவியலும், முதுகலை தமிழிலக்கியமும் பயின்றார். 1975 இல் ஐதராபாத்தில் நடந்த அகராதியியல் குறித்து நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு, அகராதியியல் நுணுக்கங்களையும், அதன் சமூகத் தேவையையும் நன்கு உணர்ந்தார். 1979 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் அகராதியியில் வளர்ச்சி வரலாறு என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்தார்.
சென்னை விவேகானந்தா கல்லூரியில் தமிழ் பயிற்றுனராக பணிக்குச் சேர்ந்தார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழத் தமிழ் பேராசிரியர், தமிழ் மொழித்துறைத் தலைவர், பதிப்புத் துறை இயக்குநர் என 34 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றார். பணி ஓய்வுக்குப் பிறகு தகைசால் பேராசிரியர், தமிழ் பேரகராதித் திட்டப்பணித் திட்ட முதன்மை பதிப்பாசிரியர் என 15 ஆண்டுகள் பணியாற்றினார். பல இளமுனைவர், முனைவர் பட்ட மாணவர்களுக்கு நெறியாளராக இருந்து வழிகாட்டியுள்ளார்.
அகராதியியல் பணிகள்
1975 இல் lexicogrohical society of india என்ற அமைப்பின் உருவாக்கத்தில் ஜெயதேவன் முக்கியப்பங்கு வகித்தார். ஆசிய அகராதியியல் கழகம் என்ற அமைப்புக்குத் தலைவராக இருந்த ஜெயதேவன் தன் அகராதிப் பணிகளை ஈடுபாட்டுடன் மேற்கொண்டார். 2007 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக இந்திய அகராதியியில் பன்னாட்டுக் கருத்தரங்கினை அதன் பொதுச்செயலாளராக இருந்து நடத்தினார். அமெரிக்கா, மொரீசியஸ், பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நடந்த பன்னாட்டு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். அந்த மாநாடுகளில் கலந்து கொண்ட அனுபவங்களே இவரது அகராதி வளர்ச்சிப் பணிகளுக்கு உத்வேகமாக இருந்தன.
தமிழ்ப் பேரகராதியின் ஏழு தொகுதிகளில், உயிரெழுத்துகளைக் கொண்ட முதல் தொகுதியை எடுத்துக் கொண்டு அதில் திருத்தங்களை மேற்கொண்டு, விடுபட்ட புதிய சொற்களை இணைத்து ஒரு தொகுதியை மூன்று தொகுதிகளாக விரிவுபடுத்தியதில் பெரும்பங்கு வகித்தார். தொல்காப்பியத்தில் உள்ள அனைத்து சொற்களுக்குமான அகராதி, 22 நிகண்டுகள்ளுக்குமான அகராதி, அணிகலண்களுக்கான அகராதி, சட்டச் சொற்களுக்கான அகராதி, சித்திரக் கவிக்கு ஒரு சிறு கலைக்களஞ்சியம் என பல அகராதிகளை பெருமுயற்சியில் கொண்டுவந்தார்.[3]
படைப்புகள்
| ஆண்டு | தலைப்பு | பதிப்பகம் |
|---|---|---|
| 1985 | தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு | ஐந்திணைப் பதிப்பகம் |
| 2004 | தொல்காப்பிய அகராதி | சென்னைப் பல்கலைக்கழகம் |
| ஈரோடு தமிழன்பன் கவிதைப் பரிமாணங்கள் தொகுதி - 1 | இலக்கிய வீதி | |
| ஈரோடு தமிழன்பன் கவிதைப் பரிமாணங்கள் தொகுதி - 2 | ||
| 2006 | ஈரோடு தமிழன்பன் : சில பதிவுகள் | ஸ்ரீ துர்க்கா பதிப்பகம் |
| ஈரோடு தமிழன்பன் கவிதையாக்கம் சில தடத்தெரிவுகள் | விடிவெள்ளி வெளியீடு | |
| பெண்ணியம் தலித்தியம் சிறாரியம் | மாசறு | |
| செயங்கொண்டார் சதகம் அல்லது செயங்கொண்டார் வழக்கம் | ||
| தமிழியலின் எதிர்காலவியல் பாகம் - (ஆறு தொகுப்புகள்) | கலைஞன் பதிப்பகம் | |
| 2013 | சிந்தாமணி நிகண்டு : மூலமும் உரையும் அகராதியும் | நோக்கு |
| 2023 | அவர்களும் அவையும் | பாரதி புத்தகாலயம் |
| 2024 | மரணம் ஒருநாள் மரணிக்கும் | பாரதி புத்தகாலயம் |
மேற்கோள்கள்
- ↑ "ஜெயதேவன், வ". விருபா. Retrieved 4 October 2025.
- ↑ "டாக்டர் ஜெயதேவன் ஓர் சந்திப்பு". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-06-30.
- ↑ மு.முருகேஷ் (2026-02-15). "அகராதியியல் வழிகாட்டி". Hindu Tamil Thisai. Retrieved 2026-02-16.
வெளி இணைப்புகள்
- தமிழ் அகராதியியல் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்