மகாதேவன் சதாசிவம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சதா எனப் பிரபலமாக அழைக்கப்பட்ட மகாதேவன் சதாசிவம் (Mahadevan Sathasivam, அக்டோபர் 18, 1915 - சூலை 9, 1977), இலங்கைத் துடுபாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். காரி சோபர்சு இவரை "உலகின் அதி சிறந்த துடுப்பாட்டக்காரர்," எனக் குறிப்பிட்டுள்ளார்.[1] 1940கள் முதல் 1960கள் வரை சதாசிவம் துடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கினார். இவரே மூன்று தேசியத் துடுப்பாட்ட அணிகளுக்குத் தலைமை தாங்கி விளையாடிய முதலாவதும், ஒரேயொரு வீரரும் ஆவார். 1948 ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கும், பின்னர் சிங்கப்பூர் அணிக்கும், பின்னர் மலேசியா அணிக்கும் தலைமை தாங்கினார். இவர் தனது மனைவியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டவர்.[2]

சதாசிவம் கொழும்பு உவெசுலி கல்லூரியில் கல்வி கற்றவர். சேர் பொன். இராமநாதனின் பெயர்த்தியான பரிபூரணம் ஆனந்தம் இராஜேந்திரா என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள்.[2] 1951 ஆம் ஆண்டில் தனது மனைவியைக் கொலை செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது; கொல்வின் ஆர். டி சில்வா தலைமையிலான வழக்கறிஞர் குழு இவருக்காக வாதாடியது. ஐக்கிய இராச்சியத்தில் இருந்து தடயவியலாளர் சிட்னி சிமித் என்பவரும் இவருக்காக வாதாடினார். 20 மாதங்களாக இடம்பெற்ற இவ்வழக்கின் இறுதியில் சதாசிவம் குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டார்.[2] இவர் பின்னர் ஐவோன் ஸ்டீவென்சன் என்பவரைத் திருமணம் புரிந்தார்.[3][4]

இதன் பின்னர் சதாசிவம் சிங்கப்பூருக்குக் குடி பெயர்ந்து அந்நாட்டுத் தேசியத் துடுப்பாட்ட அணியின் தலைவராக விளையாடினார். அதன் பின்னர் அந்நாடு மலேசியாவுடன் இணைக்கப்பட்ட பின்னர் மலேசிய அணிக்கும் தலைமை தாங்கி விளையாடினார்.[5]

மேற்கோள்களும் குறிப்புகளும்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மகாதேவன்_சதாசிவம்&oldid=28368" இருந்து மீள்விக்கப்பட்டது