ந. சிவராஜ்
ந. சிவராஜ் | |
|---|---|
| மக்களவை உறுப்பினர் | |
| பதவியில் 1957–1961 | |
| முன்னையவர் | ஓ. வி. அழகேசன் |
| பின்னவர் | ஏ. கிருஷ்ணசாமி |
| தொகுதி | செங்கல்பட்டு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 29 செப்டம்பர் 1892 கடப்பா, மெட்ராஸ் மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது ஆந்திரப் பிரதேசம், இந்தியா) |
| இறப்பு | 29 September 1964 (aged 72) மெட்ராஸ், மெட்ராஸ் மாநிலம், இந்தியா (தற்போது சென்னை, தமிழ் நாடு, இந்தியா) |
| அரசியல் கட்சி | இந்தியக் குடியரசுக் கட்சி |
| பிற அரசியல் தொடர்புகள் | நீதிக் கட்சி |
| துணைவர் | மீனாம்பாள் சிவராஜ் (தி. 1918) |
| முன்னாள் கல்லூரி | மெட்ராஸ் சட்டக் கல்லூரி |
| வேலை | அரசியல்வாதி, செயற்பாட்டாளர் |
இராவ் பகதூர் நமசிவாயம் சிவராஜ் (பி. 29 செப்டம்பர் 1892 — இ. 29 செப்டம்பர் 1964) என்பவர் இந்திய அரசியல்வாதியும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இந்தியக் குடியரசுக் கட்சியின் தேசிய முதல் தலைவர், அரசியல் தலைவர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என அறியப்பட்டவர். டாக்டர் அம்பேத்கருடன் சேர்ந்து பணியாற்றியவர். பிரித்தானிய அரசு இவருக்கு இராவ் பகதூர் பட்டம் அளித்துக் கவுரவித்தது.
கல்வி
சிவராஜ் 1892 செப்டம்பர் 29 அன்று சென்னை மாகாணத்தில் உள்ள கடப்பா நகரில் கணக்கு அதிகாரி நம்சிவாயத்தின் மகனாகத் தமிழ் பௌத்த குடும்பத்தில் பிறந்தார்.[1] இவரது முன்னோர்கள் சென்னைக்கு அருகிலுள்ள பூந்தமல்லி நகரைச் சேர்ந்தவர்கள். சிவராஜ் 1907இல் இடைநிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்று இளங்கலைப் படிப்பினை 1911இல் சென்னை மாநிலக் கல்லூரியில் முடித்தார். 1917ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார். மூத்த வழக்கறிஞர் சே. ப. இராமசுவாமியிடம் வழக்குரைஞர் பயிற்சிபெற்றார்.[2] இதன் பின்னர் பதின்மூன்று ஆண்டுகள் சென்னை சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
தொழில்
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1925இல் மெட்ராஸ்ச் சட்டக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து, பின்பு பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.
திருமணம்
சிவராஜ், தனது 26ஆம் அகவையில் 1918ஆம் ஆண்டு சூலைத்திங்கள் 10ஆம் நாள் மீனாம்பாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். மீனாம்பாள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பெண்களைத் திரட்டித் தீவிரமாகப் போராடியவர்.
அரசியல் வாழ்வு
சிவராஜ் தொடக்கக் காலம் முதலே நீதிக்கட்சியின் ஆதரவாளராக இருந்தார். பல சுயமரியாதை இயக்க மாநாடுகளிலும், நீதிக்கட்சி மாநாடுகளிலும் உரையாற்றியுள்ளார். அம்பேத்கரும் இரட்டைமலை சீனிவாசனும் இலண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு பட்டியல் பிரிவு மக்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுத்துப் போராடியபோது அவர்களுக்கு ஆதரவாகச் மெட்ராஸ் மாகாணத்தில் செயல்பட்டார். இராசகோபாலாச்சாரி 1937இல் முதல் அமைச்சரானவுடன் சிவராஜ் சட்டக்கல்லூரி பேராசிரியர் பதவியைவிட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்டார். அம்பேத்கர் அனைத்திந்திய பட்டியல் வகுப்பினர் கூட்டமைப்பை 1942இல் அமைத்தபோது சிவராஜை அதன் அகில இந்தியத் தலைவராக அறிவித்தார். சிவராஜ் அம்பேத்கருடன் நெருக்கமாக இருந்து சமூகப் பணிகளைச் செய்துவந்தார். அம்பேத்கர் மறைவுக்கு முன் செப்டெம்பர் 26 ஆம் நாள் 1956 ல் இந்தியக் குடியரசுக் கட்சி உருவாக்கப்பட்டபோது அதன் அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பணிகள்
1927 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒரே ஒரு ஆதிதிராவிட மாணவரைக்கூட சேர்த்துக் கொண்டதில்லை. சிவராஜ், பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை மீது வழக்கு தொடுத்து வழக்கில் வென்ற பிறகே 1928முதல் ஆதிதிராவிட மாணவர்கள் இக்கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆண்களுக்கு 21 எனவும், பெண்களுக்கு 16 எனவும் திருமண வயதை உயர்த்த வேண்டும் என்ற தீர்மானத்தை 27 மார்ச்சு 1928இல் மெட்ராஸ் சட்டமன்றத்தில் கொண்டுவந்தார். அதை ஆதரித்துச் சிவராஜ் உரையற்றினார். 17 நவம்பர் 1928 இல் முத்தையா முதலியார் கொண்டுவந்த வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு ஆணையைச் சத்தியமூர்த்தி எதிர்த்துப் பேசினார். முத்தையா முதலியாருக்கு ஆதரவாகச் சட்டமன்றத்தில் பேசினார். 2 மார்ச்சு 1933 அன்று பொப்பிலி அரசர் கொண்டுவந்த இனாம்நில ஒழிப்பு மசோதாவை ஆதரித்துச் சிவராஜ் உரையற்றினார். அரசர்கள் காலத்தில் பார்ப்பனர்களுக்கு இனாமாகக் கொடுத்த நிலத்தைக் கைப்பற்றி விவசாயக் குடிகளுக்குக் கொடுக்கும் மசோதா அது. காந்தி உண்ணாவிரதம் இருந்ததால் தனிவாக்களர் தொகுதியை நேர்ந்த பூனா ஒப்பந்தம் நியாயமற்றது. ஆதிதிராவிட மக்களின் உரிமையைப்பறிப்பது ஆகும் என்று அந்த ஒப்பந்தத்தைக் கண்டித்து சட்டமன்றத்தில் 1934இல் தீர்மானம் கொண்டுவந்தார். நீதிக்கட்சி ஆதரவுடன் அத்தீர்மானம் நிறைவேறியது. 7 ஆகத்து 1935 அன்று சிவராஜ் தென்னாற்காடு மாவட்டம் வெள்ளையன்குப்பம் படையாச்சிகள் குற்றப் பரம்பரைப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதை நீக்க வேண்டும் என்ற ஒத்திவைப்புத் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் கொண்டுவந்தார். மெட்ராஸ் மாநகரத்தின் முதல் மேயராக போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வகித்த பதவிகள்
- 1926 முதல் 1936 முடிய நீதிக்கட்சி ஆட்சியின் காலத்தில் சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்.
- 20 நவம்பர் 1945 அன்று மெட்ராஸ் மாநகர மேயராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1957 தேர்தலில் சுயேச்சையாக செங்கல்பட்டு மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மறைவு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்த செப்டம்பர் 1964இல் தில்லி சென்றார். தில்லியில் இருந்தபோதே 29ஆம் நாள் அதிகாலை 5.30 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் உடல் தில்லியிலிருந்து விமானம் வழியாகச் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, பவுத்த முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.
சிலை
ந. சிவராஜின் பணிகளை பாராட்டும் வகையில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, தங்கச்சாலை மணிகூண்டு அருகில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
குறிப்புகள்
- ↑ Basu, Raj Sekhar (2011-02-14). Nandanar's Children: The Paraiyans' Tryst with Destiny, Tamil Nadu 1850 – 1956 (in ஆங்கிலம்). SAGE Publications. ISBN 978-81-321-0514-5.
- ↑ Shakunthala Jagannathan (1999). Sir C. P. Remembered. Vakils, Feffer and Simmons Ltd. p. 74. ISBN 81-87111-27-5.
உசாத்துணை
- சிந்தனையாளன் பொங்கல் மலர்.20014,ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் ராவ்சகிப் ந.சிவராஜ். கட்டுரை-வாலாசா வல்லவன்.