தியாகபூமி (புதினம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தியாக பூமி
படிமம்:6980.jpg
தியாக பூமி
நூலாசிரியர்கல்கி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைசமுதாயப் புதினம்
வெளியீட்டாளர்வானதி பதிப்பகம், சாரதா பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
முதல் பதிப்பு -1968, 9 பதிப்புகள்
பக்கங்கள்424

தியாகபூமி கல்கி எழுதிய சமூகப் புதினங்களுள் ஒன்று. ஆனந்த விகடனில் இருபது இதழ்களில் தொடராக வெளிவந்தது. கல்கி இப் புதினத்தில் நிகழ்ச்சிகள் மூலமாகவும், கதைமாந்தர் வாயிலாகவும் காந்தியக் கருத்துகளை வெளியிட்டு உள்ளார். 1938-1939 களில் இப்புதினம் கோடை, மழை, பனி, இளவேனில் என நான்கு பாகங்களாக வெளிவந்தது. தீண்டாமை, பெண்விடுதலை, மது விலக்கு, விடுதலைச் சிந்தனை ஆகிய கருத்துகளடங்கிய இப்புதினம் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. அப்படம் ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்டுப் பின் தடை விலக்கப்பட்டது.[1] இந்தப் புதினத்தின் முக்கிய அம்சங்களின் ஒன்று, கல்கி ஒவ்வொரு கதாபாத்திரத்தின் எண்ணங்களையும் அவரவர் பார்வையிலிருந்து சொல்லியிருக்கிறார். நடைமுறைச் சமுதாயத்தில் காணப்படும் யதார்த்தமான பாத்திரங்களையே தமது புதினத்தில் கல்கி இடம் பெறச் செய்துள்ளார்.[2]

முன்கதைச் சுருக்கம்

நெடுங்கரை சம்பு சாஸ்திரிகள் அவர்களின் புதல்வி சாவித்திரி. வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் அவள் நகரத்து இளைஞனான ஸ்ரீதரனுக்கு பதின்வயதின் தொடக்கத்திலேயே மணமுடித்து கொடுக்கப்படுகிறாள். அவளின் திருமணதிற்கு வாங்கிய கடனால் அவளின் தந்தை பெரிதும் இன்னலுறுகின்றார். மேலும் பிராமண வகுப்பை சேர்ந்த அவர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவுவதால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கபடுகின்றார். இதன காரணமாக அவர் தன் சொத்துகளை இழந்து ஊரைவிட்டே செல்லும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றார். அதனால் அவர் சென்னைக்கு சென்று இசை ஆசிரியராக பணிபுரிகின்றார்.
அதே சமயம் அவரின் மகள் கணவர் வீட்டில் ஒதுக்கப்பட்டு நிறைமாத கர்ப்பிணியாக தனியாக ஊருக்கு அனுப்பப்படுகின்றார். அங்கு அவளின் தந்தை இல்லாததால் அவளும் சென்னைக்கு செல்கிறாள். ஒரு மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றெடுக்கும் அவள் தான் பெற்ற குழந்தையை அவளுடைய தந்தையின் குடிசை அருகே போட்டுவிட்டு சென்றுவிடுகிறாள். அவரும் அது தன் பேத்தி என்று தெரியாமலே சாருலதா என பெயரிட்டு அன்புடன் வளர்க்கிறார்.
அதன் பின்னர் சாவித்திரி தன் சொந்த அத்தையின் சொத்துகளைப் பெற்று கோடீஸ்வரியாகிறாள். பின்னர் உமாதேவி என்ற பெயரில் பல தானதர்மங்கள் செய்து ஊரில் பெரும் புகழ் பெறுகிறாள். இதன் பின்னர் அவளை விட்டு சென்ற கணவன் அவளின் சொத்துக்களுக்காக அவளுடன் சேர்ந்து வாழ நீதிமன்றத்தில் வழக்கு தொடுகின்றான். அதன் பின்னர் நடந்தவைகளையும், அவளின் குழந்தை மற்றும் மற்றவர்களின் நிலை என்ன, அவர்கள் சேர்ந்தார்களா என்பது போன்ற நிகழ்வுகளை அதற்கு பின்வரும் பகுதிகள் விளக்குகின்றன.

பகுதிகள்

இப்புதினமானது கோடை, மழை, பனி, இளவேனில் ஆகிய 4 பாகங்களை உடையது. இப்பாகங்கள் முறையே 11, 10, 16, 32 அத்தியாயங்களை கொண்டு மொத்தம் 69 அத்தியாயங்களை கொண்டுள்ளது.

கதைமாந்தர்கள்

  • சாவித்திரி, உமாதேவி
  • நெடுங்கரை சம்பு சாஸ்திரிகள்
  • ஸ்ரீதரன்
  • சாருலதா

திரைப்படமாக

இப்புதினமானது கல்கியால் திரைப்படத்துக்கென்றே எழுதப்பட்டதாகும். புதினத்தை முழுமையாக எழுதி திரைப்பட இயக்குநர் கே. சுப்பிரமணியத்திடம் கொடுத்துவிட்டு தியாக பூமி திரைப்படத்தின் படப்பிடிப்பைத் துவக்கச்சொல்லிவிட்டு, 1939 சனவரி முதல் தேதியில் இருந்து ஆனந்த விகடன் இதழில் தொடர்கதையாக எழுதத் துவக்கினார். தொடர் கதை வெளியானபோது பத்திரிக்கையில் அதன் கதை மாந்தர்களை ஒவியங்களில் குறிப்பிடாமல் திரைப்படத்தில் நடிக்கும்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை அச்சிட்டனர். ஏட்டில் தொடர்கதை முடிந்த அடுத்த வாரமே 1939 மே 20 அன்று திரைப்படம் திரைக்கு வந்தது.[3]

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. "கல்கியின் புதினம் - தியாக பூமி". முனைவர் ஆர்,தமிழ்ச் செல்வி. http://www.tamilvu.org/courses/degree/p101/p1013/html/p10134fr.htm. பார்த்த நாள்: 02 டிசம்பர் 2012. 
  2. கல்கி (2008). தியாகபூமி. சாரதா பதிப்பகம். 
  3. அறந்தை நாராயணன் (அக்டோபர் 27 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-6 பேராசிரியர் கல்கி". தினமணிக் கதிர்: 22-23. 
"https://tamilar.wiki/index.php?title=தியாகபூமி_(புதினம்)&oldid=3748" இருந்து மீள்விக்கப்பட்டது