தாயுமானவர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தாயுமானவர்
தாயுமானவர்
இயற்பெயர்/
அறியும் பெயர்
தாயுமானவர்
பிறந்ததிகதி 1705
இறப்பு 1742

தாயுமானவர் (17051742)[1] தமிழில் மெய்ப்பொருள் பற்றிப் புகழ்பெற்ற பாடல்களை இயற்றியவர்.[2]

வாழ்க்கைக் குறிப்பு

இவர் தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார் கேடிலியப்பர் மற்றும் தாயார் கேசவள்ளி அம்மையார் ஆவார்கள். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர்.[3]

தாயுமானவர் திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த விசயரகுநாத சொக்கலிங்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்து, அப்போது முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப்போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர் அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேசுவரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள் உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூறத் தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு வியந்தனர் என்பார்கள். [4]

தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர். வள்ளலாரும், பாரதியாரும் இத்தகைய எளிய கவிதைகள் பாட இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்றும் சொல்லுவதுண்டு. பின்னர் அப்பதவியைத் துறந்து திருமூலர் மரபில் வந்த, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மௌன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டார்.

தவநெறியில் சிறந்து விளங்கிய தாயுமானவர், பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப்பாடி வழிபட்டார். இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார்.

தாயுமானவரின் பாடல்

தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 56 தலைப்புகளில் 1452 பாடல்கள் உள்ளன. அவற்றில் 771 பாடல்கள் கண்ணிகளாகவும், 83 பாடல்கள் வெண்பாக்களாகவும் உள்ளன. இவருடைய 'பராபரக்கண்ணி' மிகவும் புகழுடையது. இதில் 389 கண்ணிகள் இடம்பெற்றுள்ளன.

தாயுமானவர் பாடல்கள் தமிழ்மொழியின் உபநிடதம் எனப்படுகின்றன. தாயுமானவர் சைவ சித்தாந்தம், அத்வைதம் ஆகிய இரு நிலைக்கும் ஒரு வகை சமரசம் கண்டு, வேதாந்தத்தையும் சித்தாந்தத்தையும் இணைத்தார் என்று கருதப்படுகிறது. ‘உபநிடதக் கருத்துகளையும் மற்ற ஞான நூல்களின் உட்பொருளையும் மிகத் தெளிவாகத் தமிழில் பாடியவர்’ என மு.வரதராசன் இவரைப் பாராட்டுகிறார். "தாயுமானவர் பாடல்களுக்கு சித்தாந்தம் ஒரு வேகத்தைக் கொடுத்தால், வேதாந்தம் அதற்கு நிதானத்தைக் கொடுக்கிறது " என்று நகுலன் குறிப்பிடுகிறார்.

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே (பராபரக்கண்ணி - 221)

என்ற வரிகள் புகழ்பெற்றவை.

ஆன்மசாதனையைப் பற்றி பல பல இடங்களில் குறிப்பிடுகிறார்.

நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம்-அன்பே
மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே

தாயுமானவரின் சில கருத்துகள் சித்தர்களின் கருத்தை ஒத்திருக்கின்றன, தம் காலத்தில் சமயப் போராட்டங்களையும் பூசல்களையும் கண்டு மனம் வெறுத்துச் சமரச ஒளியையே அதிகம் பாடினார். தேசோமயானந்தம், கருணாகரம், பரஞ்சோதி, பரதெய்வம் போன்ற சொற்கள் தாயுமானவர் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவை. எளிமையான பாடல்களில் உருவ வழிபாட்டைத் தாண்டி ஆதி அந்தமில்லாத, பிரபஞ்சமெங்கும் வியாபிக்கும் சுத்த அறிவாகவே இறைவனைக் காண்கிறார்.

கண்ணுள் நின்ற ஒளியைக் கருத்தினை
விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை

என அறிபவனின் கண்ணில் உள்ள ஒளியாகவும், பருவெளியில் நிறைந்த அறிபடுபொருளின் சாரமாகவும் இறைத்தன்மையை ஜாதி, குலம், பிறப்பு, இறப்பு, பந்தம், முக்தி, அரு உருவத்தன்மை, நாமம், ஏதும் இன்றி எல்லாப் பொருளிலும், எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்த ஜோதியை இனம் காட்டுகிறார்.

மனித மனத்தைப் பற்றிய நுணுக்கமான பல சிந்தனைகள் அவர் பாடல்களில் காணப்படுகின்றன. பாரதி தாயுமானவர் காட்டும் மன இயல்புகளை ஞானரதம் மற்றும் சில பாடல்களில் இலக்கிய பூர்வமாக உபயோகிக்கிறார். தாயுமானவரின் தாக்கம் இராமலிங்க வள்ளலாரின் பல பாடல்களில் காணப்படுகிறது[5]. தான் சார்ந்திருந்த சைவ சமயத்தைத் தாண்டிய சமரச சிந்தனைகளைக் கொண்டிருந்த தாயுமானவர் , பிற்காலத்தில் வந்த வள்ளலாருக்கும் நான்கு நூற்றாண்டுகள் கழித்துப் பிறந்த பாரதிக்கும் முன்னோடியாக அமைகிறார்[6]

சமயகோடிகள் எலாம்
தம்தெய்வம் எம்தெய்வம் என்று
எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கு இடவும் நின்றதுஎது?
எங்கணும் பெருவழக்காய்,
யாதினும் வல்ல ஒரு சித்து ஆகி, இன்பமாய்
என்றைக்கும் உள்ளது எது? மேல்
கங்குல்பகல் அறநின்ற எல்லைஉளது எது?
                     - தாயுமானவர்
 
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்திருள் அகற்றும் ஒளியே
நிர்க்குணா னந்தபர நாதாந்த வரை ஒங்கு
நீதி நடராசபதியே - வள்ளலார்
                                              
உள்ளதனைத்திலும் உள்ளொளியாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே — இங்கு
கொள்ளற்கரிய பிரமம் என்றே மறை
கூவுதல் கேளீரோ? - பாரதியார்

உயிர்ப்பலியை எதிர்த்தல்

பல தலங்களுக்குச் சென்று, சிவபெருமானைப் போற்றிப் பாடி வழிபட்டபோது. அங்குள்ள இடங்களில், வேண்டுதல் என்ற பெயரில் உயிர்பலி (ஆடு, மாடு, கோழி) கொடுப்பதைக் கண்டு தன் பாடல்களில் கொல்லாமையை வலியுறுத்தினார்.

கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்கி,
எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே.
கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லோர்
அல்லாதார் யாரே அறியேன் பராபரமே

தாயுமானவரின் பணி

இவரின் தந்தையான கேடிலியப்பர் திருச்சிராப்பள்ளியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்து வந்தார். அவர் மறைவுக்குப் பின்னர்த் தாயுமானவர் அப்பணியை ஏற்றார். விசயரகுநாத சொக்கலிங்கர் ஆட்சியிலும், அவர் மனைவி இராணி மீனாட்சி ஆட்சியிலும் கணக்கராகப் பணியாற்றினார்.

துறவு வாழ்க்கை

மட்டுவார்குழலி என்னும் மங்கையை மணந்து கனகசபாபதி என்ற மகவையும் பெற்று வாழ்ந்தார். பின்னர்த் துறவு வாழ்க்கையில் நாட்டங்கொண்டு துறவு பூண்டார். திருமூலர் மரபில் வந்த மௌனகுரு என்பாரின் அருளும், ஆசியும் பெற்றுச் சிறந்து விளங்கினார். அவர் முக்தி பெற்ற இடம் இராமநாதபுரத்தில் உள்ள இலட்சுமிபுரமாகும்.

மேற்கோள்

  1. திருச்சி வந்து அங்குள்ள மௌனகுரு மடத்தின் தலைவராக 1644-ல் பதவி ஏற்றார். பாடல்களைப் பாடினார். 1662 தை 28 அன்று இறைவனொடு கலந்தார் என்பது அவரது மாணாக்கர்கள் இவரது நூலுக்கு எழுதிய சிறப்புப் பாயிரச் செய்தியிலிருந்து கணக்கிட்டுக் கூறியுள்ளனர் - தாயுமான அடிகள் திருப்பாடல்கள், கழக வெளியீடு
  2. தாயுமான அடிகள் திருப்பாடல்கள் - கழக வெளியீடு - 1974 இரண்டாம் பதிப்பு
  3. குணம்
    கவலை
    செய்தி
    கையிருப்பு
    இடம்
    பேசுமொழி
    உறவு
    முதலானவை இல்லாதவன் என்று எப்போதும் நினைப்பேனா
    நீ அன்பருக்கு ஆனந்த நிறைவு
    நீயும் நானுமான உருவன்
    அருள் தருபவன்
    கற்பனை என்று இல்லாமல் ஆலமரத்து நிழலில் அமர்ந்திருப்பவன்
    எண்ண அரங்கில் ஆடுபவன்
    அருளின் வழங்குபவன்
    என்னும் செய்தியைக் கூறும் பாடல் இவ்வாறு உள்ளது.

    நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப
    நிர்விடய கைவல்யமா
    நிட்கள அசங்கசஞ் சலரகித நிர்வசன
    நிர்த்தொந்த நித்தமுக்த
    தற்பரவித் வாதீத வ்யோமபரி பூரண
    சதானந்த ஞானபகவ
    சம்புசிவ சங்கர சர்வேச என்றுநான்
    சர்வகா லமும்நினைவனோ
    அற்புத அகோசர நிவிர்த்திபெறும் அன்பருக்
    கானந்த பூர்த்தியான
    அத்துவித நிச்சய சொரூபசாட் சாத்கார
    அநுபூதி யநுசூதமுங்
    கற்பனை யறக்காண முக்கணுடன் வடநிழற்
    கண்ணூ டிருந்தகுருவே
    கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
    கருணா கரக்கடவுளே. 1.(நூலின் 6-1 ஆம் பாடல்)
    இந்தப் பாடலில் கையாளப்பட்டுள்ள வடசொற்களின் மிகுதியால் இதனை உணரலாம்
  4. செய்தி
  5. ஊரன் அடிகளின் தாயுமானவரும் வள்ளலாரும் நூலிலிருந்து, தினமணி, அக்டோபர் 5, 2014
  6. தாயுமானவர்-வள்ளலார்-பாரதி
"https://tamilar.wiki/index.php?title=தாயுமானவர்&oldid=8249" இருந்து மீள்விக்கப்பட்டது