முளைப்பாரி
முளைப்பாரி (வடமொழியில் அங்குரார்பனம்), அடுத்த விளைச்சலுக்கான விதைத் தேர்வை, அறுவடை காலங்களிலேயே விதைநேர்த்தி செய்து, அதன் முளைப்புத் திறனை பரிசோதனை செய்தே முளைப்பாரித் திருவிழாவின் நோக்கமாகும்.[1] சூரிய வெயில் அதிகம்படாத இடத்தில் வளர்க்கப்படும் முளைப்பாரி, பொதுவாக ஒன்பது தானியங்களைக் கொண்டு இரண்டு வாரங்களுக்குள் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் பெண்களைக் கொண்டே தயாரிக்கப்படுகிறது.
தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்
- ஒன்பது வகையான சுத்தமான தானியங்கள் (நெல், பச்சைப்பயிறு, அவரை, கொள்ளு, கோதுமை, உளுந்து, எள்ளு, கம்பு, ஆரியம்)
- மண்
- மண்பாண்டம்
- நீர்
- சாணம்
முறை
- மண்பாண்டம் அல்லது பாத்திரத்தில் மணலையும் சாணத்தையும் கலந்துகொள்ள வேண்டும்
- கொஞ்சம் தண்ணீர் தெளிக்க வேண்டும்
- ஒன்பது வகையான தானியங்களை அந்த கலவையில் தூவ வேண்டும்
- பின்னர் வெயில் படாத வகையில் ஒரு கூடையோ அல்லது துணியோ அல்லது வைக்கோல் கொண்டு மூடி விட வேண்டும்
- தினமும் சிறிது நேரம் வெயில் படுமாறு திறந்து வைக்க வேண்டும் மேலும் கொஞ்சம் தண்ணீர் தெளிக்க வேண்டும்
- பொதுவாக 2 வாரங்களில் அல்லது ஒன்பது நாட்களில் இவை முளைத்து விடும்.
முளைப்பாரி பாடல்கள்
நாட்டுப்புற வழிப்பாடல்களில் முளைப்பாரிப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அத்தகைய பாடலின் சில வரிகள் கீழே தரப்பட்டுள்ளன>
"நல்ல தண்ணீர் எடுத்து வந்து
நாங்கள் முளை போட்டோம்
சிவ பாலரெல்லாம் போட்டோம்
போட்ட முளை பழுதில்லாமல்
பொங்கி நல்லா வளர"
"சீர்துவரை நேர் நிறைத்து
புறுமணிப்பயர் உளுந்து கலந்து
நல்ல தினுசு அவரை நிறைத்து
வெள்ளை சிவப்பு பச்சை கலந்து
நவ தானியம் ஒன்பதும் கலந்து
போட்ட முளை பழுதில்லாமல்
பொங்கி நல்லா வளர"
பண்பாடு
- முளைப்பாரி வளர்ப்பதற்கு நல்ல நாள் நேரம் பார்த்து நாள் உறுதி செய்யப்படுகிறது. பொதுவாக இது மேல்நோக்கு நாளாக இருக்க வேண்டும்
- பெண்கள் வளமையின் குறியீடாகத் திகழ்வதனால் முளைப்பாரி பெண்கள் போடுகின்றனர்
- முளைப்பாரி ஊர்த் திருவிழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்ட பிறகு நீர்நிலைகளில் கொட்டப்படுகிறது.