தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை
தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை
இயற்பெயர்/
அறியும் பெயர்
தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை
பிறந்ததிகதி 1854
இறப்பு மார்ச் 2, 1920

தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை (T. Ramakrishna) (பி. 1854 - இ. மார்ச் 2, 1920) ஆங்கில நாவலை எழுதிய முதல் தமிழராவார். இவர் எழுதிய பத்மினி (Padmini: Tale of Indian Romance) என்ற நாவல் இலண்டனிலிருந்து 1903-இல் வெளிவந்துள்ளது. இவரே கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை அவரது மறைவுக்குப் பிறகு மறுபதிப்பு செய்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழக தமிழ்க் குழு, தமிழ் லெக்சிகன் என்ற அகராதி தயாரிப்புக் குழு ஆகியவற்றின் முதல் தலைவராக செயலாற்றியிருக்கிறார். தனது நாட்குறிப்புகளுக்காகப் புகழ்பெற்ற ஆனந்தரங்கம் பிள்ளையின் உறவினராவார். அமெரிக்க கீழைத்தேயவியல் கழகத்தின் நிரந்தர உறுப்பினராகவும், அரசவை வரலாற்றுக் கழகத்தின் (Royal Historical Society) உறுப்பினராகவும் இருந்தவர். "ராவ் சாகிப்" பட்டம் பெற்றவர். சென்னை உயர்நீதிமன்றத்தின் துபாசியாக இருந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

செங்கல்பட்டில் பிறந்து காஞ்சிபுரத்தில் பிரி சர்ச் ஆப் ஸ்காட்லாந்து மிசன் பள்ளியில் படிப்பைத் துவங்கி பின் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் மெட்ரிகுலேசன், எப்.ஏ (தருக்கம்), பி.ஏ (தத்துவம்) ஆகிய படிப்புகளை முடித்தார். 'சென்னை இலக்கிய சங்க' (ராயல் ஏசியாட்டிக் சொசைட்டி) நூலகத்தின் தலைவர் பொறுப்பில் அமர்ந்து இருபதாயிரம் நூல்களுடன் புழங்கியது இவரது எழுத்தாளுமைக்கு உரமூட்டியது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒருமுறை வட்டார மொழியான தமிழைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவிட சிலர் முன்மொழிந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்து தமிழ் தொடர்ந்திட வாதிட்டு அத்தீர்மானம் நிறைவேறாது செய்திருக்கிறார்.


தமிழிலும் தேர்ந்த ராமகிருஷ்ணப் பிள்ளை, பூவை கலியாணசுந்தரனாரின்செய்யுளிலக்கணம்’, சி.ஆர். கோவிந்தராஜ முதலியாரின் ’வாக்கிய இலக்கண சிந்தாமணி’ போன்ற நூல்களுக்கு சாற்றுக்கவிக் குறிப்பை வழங்கினார். இவரது நூல்கள் சில மலையாளத்திலும் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கால்டுவெல்லின் மறைவிற்குப் பிறகு, கால்டுவெல் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ நூலின் மூன்றாம் பதிப்பிற்கு கால்டுவெல்லின் மருமகன் ஜெ.எல். வ்யாட் (J.L.Wyatt) உடன் இணைந்து பதிப்பாசிரியராகச் செயல்பட்டார் ராமகிருஷ்ண பிள்ளை. (இவர்கள் இருவரும் இணைந்து கால்டுவெல் எழுதிய பல பக்கங்களை நீக்கி விட்டதாக ஒரு சர்ச்சை[1] உள்ளது.)

ஓர் இந்திய கிராமத்தின் கதை

டி. ராமகிருஷ்ண பிள்ளைக்குப் பெரும் புகழைத் தேடி கொடுத்த நூல் ‘ஓர் இந்திய கிராமத்தின் கதை’ (Life in an Indian Village). இது 1888-ல், சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் ஆங்கில மாத இதழில் தொடராக வெளிவந்தது. பின்னர் தொகுக்கப்பட்டு நூலாக வெளியானது. இதற்கு சென்னை ராஜதானியின் முன்னாள் கவர்னர் கிராண்ட் டஃப் முன்னுரை எழுதியிருந்தார். இந்தியாவின் கிராமத்து வாழ்க்கை பற்றி தாங்கள் அறிந்துகொள்ள இந்த நூல் பெரிதும் உதவியாக இருந்ததாக ஆங்கிலேயர் பலர் பாராட்டினர். சென்னை கவர்னராக இருந்த ஹேவ்லக் (Lord Havelock) இந்த நூலைப் பாராட்டியதுடன், சென்னை சர்வகலாசாலை உறுப்பினராக (Fellow of the Madras University) டி. ராமகிருஷ்ண பிள்ளையை நியமனம் செய்தார்.

இந்தியாவுக்கு ஆட்சிசெய்ய இங்கிலாந்திலிருந்து வரும் ஆங்கிலேய அதிகாரிகள் இந்திய மக்களையும் அதன் கிராமங்களையும் அதன் வாழ்க்கை முறையையும் புரிந்துகொள்வதற்காக எழுதப்பட்ட நூல் இது. இந்த ஆங்கில நூலை, தமிழில், ச.சரவணனின் மொழிபெயர்ப்பில் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கேளம்பாக்கம் என்ற கிராமத்தை தனது மாதிரி கிராமமாகப் பாவித்து ஒரு புனைகதை வடிவில் ராமகிருஷ்ண பிள்ளை இந்த நூலை எழுதியுள்ளார். பல்வேறு சாதி மற்றும் படி நிலைகளில் உள்ள மக்களின் வாழ்க்கையை இந்த நூல் விவரிக்கிறது. தலையாரி முத்து நாயக்கர், புரோகிதர் ராமானுஜ ஆச்சாரியார், வரதய்யங்கார், அப்பளாச்சாரி, பள்ளி ஆசிரியர் நல்லாபிள்ளை, வைத்தியர் அப்பாசாமி, கலப்பைகள் செய்யும் சுப்பராய ஆசாரி, கொல்லர் சண்முகம், இடையர் கோபால பிள்ளை, வண்ணான் முனியன், குயவர் குப்புசாமி, நாவிதர் கைலாசம், அம்மன்கோயில் பூசாரி அங்கமுத்து, பணிசிவா கந்தன், ஷைலாக் முத்துசாமி செட்டியார், பறைச்சேரி தலைவர் மாயாண்டி, கிராமத்திற்கு வருகை தரும் குறத்தி, குறிசொல்லி, கதைசொல்லி, பாம்பாட்டி, கழைக் கூத்தாடி, மந்திரவாதி எனப் பலர் மூலம் கிராமத்தின் கதையைச் சொல்கிறார் ராமகிருஷ்ண பிள்ளை.

பத்மினி (ஓர் இந்தியக் காதல் கதை)

டி. ராமகிருஷ்ண பிள்ளை ‘பத்மினி’ (Padmini an Indian Romance) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஓர் நாவலை எழுதினார். இது ஒரு வரலாற்று நாவல். 1903-ல் லண்டனில் இந்நூல் வெளியானது. தமிழர் ஒருவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முதல் வரலாற்று நாவலாக இந்த நாவல் கருதப்படுகிறது. இதற்கு பிரிட்டிஷ் கவிஞர் ஜேம்ஸ் ப்ரைஸ் முன்னுரை எழுதியிருந்தார்.

இந்த நூலை, தமிழில், பேராசிரியர் சிவ. முருகேசன் மொழிபெயர்த்துள்ளார். விஜயநகரப் பேரரசரைக் கொன்று ஆட்சியை கைப்பற்றும் சலுவா, பேரழகி பத்மினியைக் கண்டு அவள் மீது காதல் கொள்கிறான். பத்மினிக்கோ சென்னப்பாவின் மீது காதல். இந்த முக்கோணக் காதல் கதையை வரலாற்றுப் பின்னணியோடு நாவலாக்கியிருக்கிறார், ராமகிருஷ்ண பிள்ளை. இந்தச் சென்னப்பா தான், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்ட இடம் வழங்கியவன்.

விமர்சனங்கள்

டி. ராமகிருஷ்ண பிள்ளையின் நூல்கள், ஆங்கிலேயர்களால் மிகவும் மதிக்கப்பட்டன. பாராட்டப்பட்டன. கீழ்க்காணும் ஆங்கில இதழ்கள் அவரது நூல்களை விமர்சித்துப் பாராட்டின.

  • The Contemporary Review
  • Daily Telegraph
  • Morning Post
  • Athenaeum
  • Pall Mall Gazette (18 May 1891)
  • St James's Gazette
  • Literary World
  • The Indian Magazine
  • The Scotsman
  • Manchester Guardian
  • Leeds Mercury
  • Birmingham Post
  • Christian Leader
  • Independent
  • British Weekly
  • Bookseller
  • Leeds Mercury (13 Oct. 1890)
  • The Graphic
படிமம்:Miller statue.jpg
மில்லர் உருவச் சிலை - சென்னை கிறிஸ்தவக் கல்லூரி
படிமம்:Guruvai Thedi.jpg
குரு மில்லருடனான சந்திப்பு பற்றிய அத்தியாயம் (My Visit to the West)

மில்லர் உருவச்சிலை

தமக்கும் தம்மைப் போன்ற பலருக்கும் வழிகாட்டியாகவும், வாழ்க்கை உயரக் காரணமானவராக இருந்த டாக்டர் மில்லரைப் பெருமைப்படுத்த விரும்பினார் டி. ராமகிருஷ்ண பிள்ளை. தனது நிதியைக் கொண்டும், மில்லரிடம் பயின்ற பிற மாணவர்கள், ஆசிரியர்களிடமிருந்தும் நிதி திரட்டினார். அதைக் கொண்டு, 1901-ல், தாம் பயின்ற, மில்லர் பணியாற்றிய கிறிஸ்தக் கலாசாலையில், மில்லரின் உருவச் சிலையை நிர்மாணித்தார். அப்போதைய சென்னை கவர்னராக இருந்த லார்ட் ஆம்தில் பிரபு (Lord Ampthil) அந்த விழாவை முன்னின்று நடத்தினார்.

மில்லரைத் தனது குருவாகவே டி. ராமகிருஷ்ண பிள்ளை கருதினார். அதற்காகவே, 1911-ல், மில்லர் வாழ்ந்த ஸ்காட்லாந்திற்குப் பயணம் செய்து அவரைச் சந்தித்தார். தனது குருவுடன் சில நாட்கள் தங்கினார். அந்தப் பயண அனுபவத்தை, ‘My Visit to the West' என்ற தலைப்பில் நூலாக எழுதினார்.

மன்னருக்கு வாழ்த்து

ஏழாம் எட்வர்ட்டுக்கு பட்டம் சூட்டப்பட்டபோது அவருக்கு வாழ்த்துக் கவி ஒன்றை இயற்றி அனுப்பினார், டி. ராமகிருஷ்ண பிள்ளை. உலகளாவிய நிலையில் 1089 கவிஞர்கள் இயற்றி அனுப்பிய கவிதைகளில், 69 கவிதைகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டன. அவற்றுள் ராமகிருஷ்ண பிள்ளையின் கவிதை நான்காம் இடத்தை பெற்றுப் பலராலும்பாராட்டப்பட்டது.

பொறுப்புகள்

டி. ராமகிருஷ்ண பிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். சென்னை ராயல் ஏசியாட்டிக் சொசைட்டியின் தலைவராகப் பணிபுரிந்தார். திராவிட மொழிகள் ஆய்வுக் குழுவின் தலைவர் (Chairman of the Board of Studies in the Dravidian Languages) ஆகப் பணியாற்றினார். சென்னைப் பல்கலைக்கழக தமிழ்க்குழு, தமிழ் லெக்சிகன் என்ற அகராதி தயாரிப்புக் குழு ஆகியவற்றின் முதல் தலைவராக இருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் மொழி வாரியத் தேர்வாளர்களின் தலைவர்’ Chairman of the Tamil Board Examiners ஆகப் பணிபுரிந்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி உருவாக்குவதற்கான சிண்டிகேட் குழு அமைக்கப்பட்டபோது, சென்னைப் பல்கலைக்கழகத்தால் அதன் ஐந்து உறுப்பினர்களுள் ஒருவராக டி. ராமகிருஷ்ண பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார். யது குல மகா சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ராமகிருஷ்ணப் பிள்ளையும் ஒருவர். அந்தச் சங்கத்திலும் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.

விருதுகள்

ராமகிருஷ்ணப் பிள்ளையின் இலக்கியச் சேவையைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு அவருக்கு ‘ராவ்சாஹிப்’ பட்டம் அளித்துச் சிறப்பித்தது.

மறைவு

மார்ச் 2, 1920-ல், உடல் நலக் குறைவால், டி. ராமகிருஷ்ணப் பிள்ளை காலமானார்.

இலக்கிய இடம்

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் வல்லமை பெற்றிருந்த செல்வக்கேசவராய முதலியார், பி. ஆர், ராஜம் ஐயர், அ. மாதவையா வரிசையில் இடம் பெறத் தக்கவர், டி. ராமகிருஷ்ண பிள்ளை. ஆங்கிலத்தில் வரலாற்று நாவல் எழுதிய முதல் தமிழர். ‘ஆங்கிலத்தில் நாவல் எழுதிய இரண்டாவது எழுத்தாளர் இவர்’ என ‘பத்மினி' நாவலின் பதிப்பாசிரியரான ரெங்கையா முருகன் குறிப்பிடுகிறார்.

இந்திய கிராம மக்களின் வாழ்க்கையை ஆங்கிலேயர்கள் அறியச் செய்தி முன்னோடி எழுத்தாளராக டி. ராமகிருஷ்ண பிள்ளை மதிப்பிடப்படுகிறார்.

எழுதியுள்ள நூல்கள்

  • Seetha and Rama: A Tale of Indian Famine (1877)
  • Tales of Ind and Other Poems (1896)
  • Padmini: Tale of Indian Romance (1903)
  • Early Reminiscences of T. Ramakrishna (1907)
  • Dive for Death (1911)
  • Life in an Indian Village (1911)
  • Visit to the West

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்