டொன் பாரன் ஜெயதிலக்கா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
டொன் பாரன் ஜெயதிலக்கா
Don Baron Jayatilaka

දොන් බාරොන් ජයතිලක
Don Baron Jayatilaka (1868-1944).jpg
உள்ளூராட்சி அமைச்சர்
பதவியில்
10 சூலை 1931 – 30 நவம்பர் 1942
முன்னவர் எவருமில்லை
பின்வந்தவர் சேர் அருணாசலம் மகாதேவா
இலங்கை அரசாங்க சபையின் அவைத் தலைவர்
பதவியில்
10 சூலை 1931 – 30 நவம்பர் 1942
முன்னவர் எவருமில்லை
பின்வந்தவர் டி. எஸ். சேனநாயக்கா
இலங்கை சட்டவாக்கப் பேரவையின் துணைத் தலைவர்
பதவியில்
1930–1931
குடியரசுத் தலைவர் எர்பட்ர் இசுட்டான்லி
பெர்னார்ட் என்றி போர்டிலன்
கிரயெம் தொம்சன்
முன்னவர் யேம்சு பீரிசு
பின்வந்தவர் எவருமில்லை
தனிநபர் தகவல்
பிறப்பு (1868-02-13)13 பெப்ரவரி 1868
வரகொட, களனி, இலங்கை
இறப்பு 29 மே 1944(1944-05-29) (அகவை 76)
பெங்களூர், இந்தியா
தேசியம் இலங்கையர்
வாழ்க்கை துணைவர்(கள்) மல்லிகா பத்துவந்துடாவை ஜெயதிலக்க
பிள்ளைகள் 3 பெண்கள், 2 ஆண்கள்
பணி அரசியல்வாதி, தூதர், கல்வி
தொழில் பார் அட் லா

சேர் டொன் பாரன் ஜெயதிலக்கா (Sir Don Baron Jayatilaka, 13 பெப்ரவரி 1868 – 29 மே 1944) என்பவர் இலங்கை சிங்களக் கல்வியாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் இலங்கை சட்டவாக்கப் பேரவையின் பிரதித் தலைவராகவும், உள்ளூராட்சி அமைச்சராகவும் இலங்கை அரசாங்க சபையின் அவைத் தலைவராகவும், புது தில்லிகான இலங்கைத் தூதராகவும் பணியாற்றினார்.[1] இவர் இலங்கையில் பௌத்தக் கல்விக்கு வழிகோலியவராகவும் அறியப்படுகிறார்.[2]

தொடக்க வாழ்க்கை

பாரன் ஜெயதிலக்கா களனியில் வரகொட என்ற இடத்தில் டொன் டானியேல் ஜெயதிலக்க, லியனகே டொனா எலிசியானா பெரேரா வீரசிங்க ஆகியோருக்குப் பிறந்தார். தந்தை ஒரு அரசுப் பணியாளர். தாயார் டொன் அந்திரிசு டி சில்வா பத்துவந்துடாவை என்ற ஒரு கீழைத்தேயக் கல்வியாளரின் மகள் ஆவார்.

கல்வி

பாரன் ஜெயதிலகா ஏழாவது அகவையில் வித்தியாலங்கார பிரிவின என்ற பள்ளியில் சிங்களம், பாளி, சமசுகிருதம் ஆகியவற்றை தர்மலோக தேரர் என்பவரிடம் கற்றார். ஆங்கிலமும், ஆங்கிலம் மூலம் ஏனைய பாடங்களையும் கற்க அவர் உள்ளூர் பாப்திசப் பாடசாலைக்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்து அவர் இடைநிலைக் கல்விக்காக கொழும்பு உவெசுலி கல்லூரி 1881 இல் சென்றார். அப்பள்ளியில் இருந்து இளநிலை, மற்றும் முதுநிலை கேம்பிரிட்சு சோதனைகளில் சித்தியடைந்து, கொல்கத்தா பல்கலைக்கழகம் சென்று இலத்தீன், ஆங்கிலம் ஆகியவற்றில் 1896 இல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[3]

ஆசிரியப் பணி

பட்டபடிப்பை முடித்து இலங்கை திரும்பி உவெசுலி கல்லூரியிலும், பின்னர் கண்டி தர்மராஜா கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1898 திசம்பரில், கொழும்பு ஆனந்தா கல்லூரியில் அதிபராக நியமிக்கப்பட்டார். இப்பாடசாலை அக்காலத்தில் ஆங்கில பௌத்த பாடசாலை என அழைக்கப்பட்டது. இது பிரம்மஞான சபையினால் 1907 வரை நிர்வகிக்கப்பட்டு வந்தது[3]

சட்டப் பணி

1910 இல் இவர் ஐரோப்பா சென்றார். மூன்றாண்டுகள் அங்கு தங்கியிருந்த போது, பெர்லினில் நடந்த சமயங்களுக்கான காங்கிரசு மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். 1913 இல் சட்டவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சில ஆண்டுகளில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர் இலங்கை மீயுயர் நீதிமன்ற வழக்குரைஞரானார். அதன் பின்னர் அவர் கொழும்பில் தனது சட்டப் பணியை பௌத்த திருச்சபை சட்டம், பௌத்த சமயங்கள் மற்றும் அரசியலமைப்பு சட்டம் ஆகிய துறைகளில் தொடர்ந்தார்.[3][4]

அரசியல் பணி

Sir D.B.Jayatilaka (Seated left) as a member of the 1936 இல் இரண்டாவது இலங்கை அரசாங்க சபையின் உறுப்பினராக சேர் ஜெயதிலக்க (இடது பக்கத்தில் அமர்ந்திருப்பவர்)

1890 இல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டை சந்தித்து, நாட்டில் பௌத்தக் கல்வியை ஆங்கில மூலம் கற்பிப்பதற்கான அவரது பிரசாரத்தில் இணைந்து செயல்பட்டார். கண்டியில் பௌத்த உயர்தரப் பாடசாலையில் (இன்றைய கண்டி தர்மராஜா கல்லூரி) அதிபராக நியமிக்கப்பட்டார். பின்னர் கொழும்பு ஆங்கில பௌத்தப் பாடசாலையில் (ஆனந்தா கல்லூரி) அதிபராக நியமிக்கப்பட்டார். பொரளையில் 1898 ஆம் ஆண்டு பொரளையில் இளம் ஆண்கள் பௌத்த சங்கத்தை (YMBA) நிறுவி அதன் தலைவரானார். இறக்கும் வரை அவர் அப்பதவியில் இருந்தார்.[3]

1915 சிங்கள-முசுலிம் கலவரத்தின் போது, தேசத்துரோகப் பேச்சுகள் மற்றும் எழுத்துக்களின் உரிமைகோரல்களின் பேரில், இலங்கையின் கட்டளைத் தளபதியின் கட்டளையின் கீழ் கைது செய்யப்பட்டு, அன்றைய பல முக்கிய அரசியல் செயற்பாட்டாளர்களுடன் இராணுவச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையான உடனேயே அவர் பிரித்தானியா சென்றார், அங்கு அவர் இலங்கையில் நடந்த அநீதிகளுக்கு முடிவுகட்ட பிரச்சாரம் செய்தார், 1915 கலவரங்களை விசாரிக்க அரச ஆணையத்தி நிறுவக் கோரினார். இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்ட போது அவர் இலண்டனில் அதன் பிரதிநிதியாக இருந்து செயற்பட்டார்.

1919 இல் இலங்கை திரும்பினார், 1923 இல் இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவரானார். இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு கொழும்பு மாவட்டத்தில் இருந்து தெரிவாகி, 1930 இல் பேரவைத் துணைத் தலைவரானார். தலைவராக இலங்கையின் ஆளுநர் இருந்தார்.

1931 இல் இலங்கை அரசாங்க சபைக்கு களனித் ஹொகுதியில் இருந்து தெரிவாகி உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டு, முதலாவது அமைச்சரவைக்கு த்ணைத் தலைவரானார். 1932 இல் இவருக்கு சேர் பட்டம் வழங்கப்பட்டது. 1936 இல் மீண்டும் அரசாங்க சபைக்குத் தெரிவாகி தொடர்ந்து உள்ளூராட்சி அமைச்சராகவும், அமைச்சரவையில் பிரதித் தலைவராகவும் 1942 வரை பதவியில் இருந்தார். இரண்டாம் உலகப் போரின்போது, சப்பானிய விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து வெறிச்சோடிய கொழும்புத் துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து உணவுகளை இறக்க தன்னார்வலர்களை ஏற்பாடு செய்ய அவர் உதவினார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=டொன்_பாரன்_ஜெயதிலக்கா&oldid=24816" இருந்து மீள்விக்கப்பட்டது