குருவிக்கரம்பை வேலு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குருவிக்கரம்பை வேலு
குருவிக்கரம்பை வேலு
இயற்பெயர்/
அறியும் பெயர்
குருவிக்கரம்பை வேலு
பிறந்ததிகதி நவம்பர் 26, 1930
இறப்பு மார்ச் 3, 2010



குருவிக்கரம்பை வேலு (நவம்பர் 26, 1930 - மார்ச் 3, 2010) சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவர். தீவிர நாத்திகர். குத்தூசி குருசாமி வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். சிந்து முதல் குமரி வரை, இதுதான் வேதம், இவர் தான் புத்தர், நாத்திகம் பேசும் சூத்திரச்சியே ஆகிய நூல்களையும் இன்னும் பல நூல்களையும் எழுதியவர். இவர் 3-3-2010ல் இறந்தார். இவரது உடல் 4-3-2010 அன்று சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்( மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுப் பணிக்காக) அவருடைய குடும்பத்தினரால் ஒப்படைக்கப்பட்டது.

இலக்கிய வாழ்க்கை

குத்தூசி குருசாமி மீது மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டிருந்த வேலு, அவரது வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து நூலாக்கினார். குத்தூசி குருசாமியின் படைப்புகள் பலவற்றைத் தொகுத்து வெளியிட்டார். குஞ்சிதம் அம்மையாரின் வாழ்க்கையை ஆவணமாக்கினார். சிந்துவெளி நாகரிகம், ஹரப்பா நாகரிகம் பற்றி ஆய்வு செய்து பல நூல்களை வெளியிட்டார். வேதம் பற்றி ஆய்வு செய்து குருவிக்கரம்பை வேலு எழுதியிருக்கும் ‘இதுதான் வேதம்' நூல், திராவிட இயக்கத்தாரால் பெரிதும் வரவேற்கப்ப்பட்டது. குருவிக்கரம்பை வேலு, 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

அரசியல்

பொதுவுடைமை கட்சியைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலத் தலைவராகச் செயல்பட்டவருமான கே. முத்தையா குருவிக்கரம்பை வேலுவின் மாமா. அவர் மூலம் பொதுவுடைமை இயக்கச் சிந்தனைகள் சிறு வயதிலேயே அறிமுகமாகின. வாசித்த ‘மாமேதை லெனின்’, ’பொதுவுடைமைதான் என்ன’ போன்ற நூல்களால் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. பள்ளி ஆசிரியர் எஸ்.பி. தங்கவேலுவால் திராவிட இயக்கக் கொள்கைகளின் அறிமுகம் ஏற்பட்டது. ஈ.வெ.ராமசாமி பெரியார் மீது பற்று உண்டானது. கல்லூரியில் படிக்கும்போது குத்தூசி குருசாமியின் அறிமுகம் ஏற்பட்டது. அவர் மீதும் அவரது எழுத்தின் மீதும் கொண்ட ஆர்வத்தால் வேலு, திராவிட இயக்க ஆதரவாளராகச் செயல்பட்டார். திராவிட இயக்கப் போராட்டங்களில் கலந்துகொண்டார்.

குருசாமி, திராவிட இயக்கத்தில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தபோது, குருவிக்கரம்பை வேலுவும், அதில் இணைந்து பணியாற்றினார். சுயமரியாதை இயக்கம் நடத்திய பல போராட்டங்களில் கலந்துகொண்டார்.

மறைவு

குருவிக்கரம்பை வேலு, மார்ச் 3, 2010-ல், தனது எண்பதாம் வயதில் காலமானர்.

வரலாற்று இடம்

குருவிக்கரம்பை வேலு திராவிட இயக்க எழுத்தாளராக மதிப்பிடப்படுகிறார். வாழ்க்கை வரலாறு, பண்பாட்டு ஆய்வு ஆகியவை அவருடைய களங்கள். குருசாமி, குஞ்சிதம் அம்மையார் ஆகியோரது வாழ்கையை ஆவணப்படுத்தினார். குத்தூசி குருசாமியின் கட்டுரைகளைத் தேடித் தொகுத்து வெளியிட்டது குருவிக்கரம்பை வேலுவின் முக்கிய பணியாக பதிப்பிடப்படுகிறது. வேலு எழுதிய ‘Tamil kingdom at Harappa' நூல் சிந்துவெளி, ஹரப்பா நாகரிகம் பற்றிய முக்கியமானதொரு ஆய்வு நூலாக ஆய்வாளர்களால் முன் வைக்கப்படுகிறது.

நூல்கள்

  • குத்தூசி குருசாமி வாழ்க்கை வரலாறு
  • சுயமரியாதைச் சுடரொளி குஞ்சிதம் அம்மையார்
  • இதுதான் வேதம்
  • கடவுளின் எதிரி
  • சிந்து முதல் குமரி வரை
  • இவர்தான் புத்தர்
  • அரப்பாவில் தமிழர் நாகரிகம்
  • அரப்பாவில் தமிழர் ஆட்சி
  • சிந்துவெளித் தமிழகம்
  • மீன், ஊன், கள்ளும் கலந்த தமிழ்
  • வால்மீகி இராமாயணம்
  • குத்தூசி குருசாமி விலகியது ஏன்?
  • கல்லாய்ச் சமைந்த உயிரினங்கள்
  • உலகைக் கவர்ந்த படைப்பாளிகள்
  • கல்மாடும் கல்நெஞ்சும் - குருசாமியின் குத்தூசிக் கட்டுரைகள்
  • அம்பே சிவம் - குருசாமியின் குத்தூசிக் கட்டுரைகள்
  • தோற்பதே நல்லது - குருசாமியின் குத்தூசிக் கட்டுரைகள்
  • மியூசிய நாதர் கோயில் - குருசாமியின் குத்தூசிக் கட்டுரைகள்
  • Tamil kingdom at Harappa (ஆங்கில நூல்)

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=குருவிக்கரம்பை_வேலு&oldid=3895" இருந்து மீள்விக்கப்பட்டது