அ. துரைராசா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பேராசிரியர்
அ. துரைராஜா
A. Thurairajah
A. Thurairajah.jpg
யாழ் பல்கலைக்கழகத்தின் 2வது உபவேந்தர்
பதவியில்
செப்டம்பர் 1988 – ஏப்ரல் 1994
முன்னவர் சு. வித்தியானந்தன்
பின்வந்தவர் கே. குணரத்தினம்
தனிநபர் தகவல்
பிறப்பு (1934-11-10)10 நவம்பர் 1934
கம்பர்மலை, வடமராட்சி, யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை
இறப்பு 11 சூன் 1994(1994-06-11) (அகவை 59)
கொழும்பு, இலங்கை
படித்த கல்வி நிறுவனங்கள் உடுப்பிட்டி அமிக
ஹாட்லிக் கல்லூரி
இலங்கைப் பல்கலைக்கழகம்
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
தொழில் கல்விமான்
இனம் இலங்கைத் தமிழர்

பேராசிரியர் அழகையா துரைராசா (Alagiah Thurairajah; 10 நவம்பர் 1934 – 11 சூன் 1994) இலங்கைத் தமிழ் கல்வியாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், பேராதனைப் பல்கலைக்கழக முன்னைநாள் பொறியியல் துறைப் பீடாதிபதியும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

துரைராசா யாழ்ப்பாணம் வடமராட்சியில் கம்பர்மலை என்னும் ஊரிலே, இமையாணனைச் சேர்ந்த வேலுப்பிள்ளை அழகையா-செல்லம்மா ஆகியோருக்கு 1934 நவம்பர் 10 இல் பிறந்தார்.[1][2] தனது ஆரம்பக்கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும், உயர்தரக்கல்வியை ஹாட்லிக் கல்லூரியிலும்[1][2] கற்று, 1953 சூலையில் பேராதனைப்பல்கலைக்கழகத்திலும் பட்டப்படிப்பை மேற்கொண்டு குடிசார் பொறியியலில் 1957 ஆம் ஆண்டில் இளமாணிப் பட்டம் பெற்றார்.[1][2]

பின்னர் 1958 மார்ச் வரை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றி, நான்கு மாதங்கள் பொதுப்பணித் திணைக்களத்தில் இளைய பொறியியலாளராகப் பணியாற்றினார்.[2] பின்னர் புலமைப்பரிசில் பெற்று பேராசிரியர் கென்னத் ரொசுக்கோ வழிகாட்டலில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்தார்.[2] 1958 அக்டோபர் முதல் 1961 திசம்பர் வரை துரைராசா மண்ணின் வெட்டுப் பண்புகள் பற்றிய ஆய்வில் ரொசுக்கோவிற்கு உதவினார்.[1][2] இந்த ஆய்வின் மூலம் 1962 சூன் மாதத்தில் "கயோலின் மற்றும் மணலின் சில வெட்டுப் பண்புகள்" என்ற தலைப்பில் துரைராசாவிற்கு முனைவர் பட்டம் கிடைத்தது.[1][2]

துரைராசா இராசேசுவரி என்பாரைத் திருமணம் செய்தார்.[1] இவர்களுக்கு மூன்று பெண்களும், இரண்டு ஆண்களுமாக ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.[1][2]

பணி

முனைவர் பட்டம் பெற்ற துரைராசா இலங்கை திரும்பும் முன்னர் இலண்டனில் 1962 இல் டெரிசர்ச் என்ற நிறுவனத்தில் சிறிது காலம் பணிபுரிந்தார்.[1][2] பின்னர் பேராதனை, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.[1][2] 1971 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தில் குடிசார் பொறியியல் பேராசிரியராக ஆவதற்கு முன்பு கனடா, வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.[1][2] மே 1975 முதல் செப்டம்பர் 1977 வரையும், பின்னர் பெப்ரவரி 1982 முதல் பெப்ரவரி 1985 வரையும் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்தில் பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக இருந்தார்.[1][2][3] அக்டோபர் 1977 முதல் திசம்பர் 1978 வரை பிரிட்டிசு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[1][2] ஏப்ரல் 1987 முதல் ஆகத்து 1988 வரை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக இருந்தார்.[1][2]

1988 செப்டம்பர் முதல் 1994 மார்ச் வரை துரைராசா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.[1][2][4] தனிப்பட்ட மருத்துவக் காரணங்களுக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து விலகி கொழும்பு சென்று அங்குள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் சிறிதுகாலம் பணியாற்றினார்.[1] 1994 சூன் 11 அன்று இரத்தப் புற்றுநோயினால் ஏற்பட்ட இதய செயலிழப்பினால் கொழும்பில் காலமானார்.[1][2] இவர் இறந்த பின்னர் இவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மாமனிதர் விருது வழங்கிக் கௌரவித்தனர்.[5]

துரைராசா 1977 முதல் இலங்கை தேசிய அறிவியல் கல்விக்கழகத்திலும், 1979 முதல் இலங்கை குடிசார் பொறியியல் நிறுவனத்திலும், 1985 மே முதல் ஐக்கிய இராச்சியத்தின் குடிசார் பொறியியல் நிறுவனத்திலும் உறுப்பினராக இருந்தார்.[1][2] 1986 இல் இவர் இலங்கை தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் தலைவராகவும்,[1] அக்டோபர் 1989 முதல் அக்டோபர் 1990 வரை இலங்கை குடிசார் பொறியியல் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து சேவையாற்றினார்.[2] இவர் மண் பொறியியலில் நிபுணராகவும் இருந்தார்.[6] பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் ‘அக்பர் பாலம்’ பேராசிரியர் துரைராசாவினால் அமைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அ._துரைராசா&oldid=23820" இருந்து மீள்விக்கப்பட்டது