அலாகோவாஸ்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

அலாகோவாசு (Alagoas) [1] பிரேசில் நாட்டிலுள்ள 27 மாநிலங்களில் ஒன்றாகும். அந்நாட்டின் வடகிழக்கு மண்டலத்தின் கிழக்குப் பகுதியில் இம்மாநிலம் அமைந்துள்ளது. வடக்கு மற்றும் வடகிழக்கில் பெர்னம்புகோ மாநிலமும், தெற்கில் செர்கிபெ மாநிலமும், தென்மேற்கில் பாகையா மாநிலமும், கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் அலாகோவாசு மாநிலத்திற்கு எல்லைகளாக அமைந்துள்ளன. 27,767 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இம்மாநிலம் எயிட்டி நகரத்தை விட சற்று பெரிய மாநிலமாக உள்ளது. மேசியோ நகரம் இம்மாநிலத்தின் தலைநகரமாகும்.

அலாகோவாசு மாநிலத்தில் 102 நகராட்சிகள் உள்ளன. மேசியோ, அர்பிராகா, பால்மீரா தாசு இண்டியோசு, ரியோ லார்கோ, பென்னிடோ யுனியா தாசு பால்மெரியா, சாவோ மிகியுவல் தாசு கம்போசு, சாண்டனா தூ இபானெமா, தெல்மிரோ கௌவியாம் கோருரிபெ, மேரிசால் தியோதோரோ, கேம்போ அலிக்ரெ போன்றவை இங்குள்ள மிகவும் பிரபலமான ஊர்களாகும். பிரேசில் நாட்டு மாநிலங்களில் பரப்பளவின் அடிப்படையில் இரண்டாவது சிறிய மாநிலமாக அலாகோவாசு கருதப்படுகிறது. இந்த அடிப்படையில் முதலிடம் பிடிப்பது செர்கிபெ மாநிலமாகும். இந்த மாநிலத்திற்கு பிரேசில் நாட்டின் ரோட் தீவு என்ற பெயரும் உண்டு. மக்கள் தொகையில் இம்மாநிலம் 16ஆம் இடத்தில் உள்ளது. மிக அதிக அளவு கரும்பு மற்றும் தேங்காய் உற்பத்தி செய்யும் பிரேசிலிய மாநிலங்களில் இதுவும் ஒன்றாகும். பெரிய அளவில் கால் நடை வளர்ப்பும் இந்த மாநிலத்தின் பொருளாதாரத்தில் பெரும்பங்காற்றுகிறது.

கடற்கரை மாநிலமாக உள்ளதால் கடற்காயல் எனப்படும் கடல் சார்ந்த ஏரிவாழ் உயிரினங்கள் இந்த மாநில மக்களின் உணவுப் பழக்கத்தில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இளநீரும் இங்கு முக்கிய உணவாக உள்ளது. இந்த மாநிலம் பிரேசில் நாட்டின் பண்டைய கலாச்சாரத்தின் சிறப்பிடமாகவும் திகழ்கிறது.

தொடக்கக் காலத்தில் அலகோவானோ பிரதேசம் பெர்னம்புகோவின் தலைமையில் தெற்கு பகுதியாகவே உருவானது. அலாகோவாசு 1817 ஆம் ஆண்டில் தனி மாநிலமானது. மாநிலத்தின் ஆக்கிரமிப்பு கரும்பு விவசாயத்தின் விரிவாக்கத்தை குறைத்தது. தெற்கு நோக்கிய புதிய சாகுபடி பகுதிகளின் அவசியம் உண்டானது. இதனால் போர்டோ கால்வோ, மேரிசால் தியோதோரோ எனப்படும் அலகோசு பெனெடோ, முதலிய பகுதிகள் உருவாகின. இவை மாநிலத்தின் காலனித்துவம், பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கையை நீண்ட காலமாக வழிநடத்தின.

பெர்னம்புகோவின் மீது மேற்கொள்ளப்பட்ட டச்சு படையெடுப்பு 1631 இல் அலகோவாசுக்கும் நீட்டிக்கப்பட்டது. போர்டோ கால்வோவில் நிகழ்ந்த கடுமையான சண்டைக்குப் பின்னர் 1645 இல் படையெடுப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர், இதனால் மாநிலத்தின் பொருளாதாரம் சீர்குலைந்தது.

டச்சு படையெடுப்பின் போது ஆப்பிரிக்க அடிமைகள் தப்பித்து ஓடியதால் கரும்பு தோட்டங்களில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினையை உருவானது. . குயிலோம்போசு என்று அழைக்கப்படும் கிராமங்களில் குயிலோம்போலாசு எனப்பட்ட ஆப்பிரிக்க இனக்குழுக்கள் 17 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தினர்

மன்னராட்சி காலத்தில் 1824 ஆம் ஆண்டில் பிரிவினை வாதிகளால் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. 1840 ஆம் ஆண்டில் மக்களிடையே அவ்வப்போது பிளவுகளும் சண்டைகளும் நடந்த வண்ணம் இருந்தன.

20 ஆம் நுற்றாண்டின் துவக்கத்தில் அலாகோவாசு தொழிலதிபர் டெல்மிரோ கோவியோ என்பரால் மாநிலம் சிறப்பாக வழிநடத்தப்பட்டது. இந்த மாநிலத்தில் தேங்காய் நாறு கொண்டு பொருட்கள் செய்யும் தொழிற்சாலை ஒன்றை இவர் துவக்கினார். நாள் ஒன்றிற்கு 200 கட்டுகளுக்கும் மேல் கயிறுப் பொட்டலம் உற்பத்தி என்ற இலக்கு இந்த மாநிலப் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டது. சூழலறியமுடியாத நிலையில் தொழிலதிபர் டெல்மிரோ கோவியோ 1917 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். இவருக்குப் பிறகு இந்த தொழிற்சாலை வெளிநாட்டவரால் விலைக்கு வாங்கப்பட்டது. இந்த தொழிற்சாலை முழுவதுமாக இடிக்கப்பட்டு இதன் இயந்திர பாகங்கள் அருகில் இருந்த அருவியில் எறியப்பட்டதாக சொல்லப்படுகிறது..

மேற்கோள்கள்

  1. The European Portuguese pronunciation is [ɐlɐˈɣoɐʃ].
"https://tamilar.wiki/w/index.php?title=அலாகோவாஸ்&oldid=257129" இலிருந்து மீள்விக்கப்பட்டது