மறைமலை இலக்குவனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மறைமலை இலக்குவனார்
மறைமலை இலக்குவனார்
இயற்பெயர்/
அறியும் பெயர்
மறைமலை இலக்குவனார்
பிறந்ததிகதி திசம்பர் 14, 1946
பிறந்தஇடம் சிந்துபூந்துறை திருநெல்வேலி மாவட்டம்.
பணி பேராசிரியர்
தேசியம் இந்தியர்
கல்வி கலை முதுவர், முனைவர்
பணியகம் சென்னை மாநிலக் கல்லூரி
அறியப்படுவது சொல்லாக்கம், திறனாய்வு
பெற்றோர் முனைவர் சி. இலக்குவனார், மலர்க்கொடி
துணைவர் க. சுபத்ரா
பிள்ளைகள் முனைவர் நீலமலர்

மறைமலை இலக்குவனார் என்னும் முனைவர் சி. இ. மறைமலை (பிறப்பு:திசம்பர் 14, 1946) தமிழ்ப் பேராசிரியர்; இலக்கியத் திறனாய்வாளர்; கவிஞர்; நூலாசிரியர்; சொற்பொழிவாளர்; மொழிபெயர்ப்பாளர்; இதழாசிரியர் என்கிற பன்முகம் கொண்ட தமிழறிஞர்.

பிறப்பு

தமிழ்ப் பேராசிரியர் சி. இலக்குவனார் - மலர்க்கொடி இணையர்களின் மகனாக 1946ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 14ஆம் நாள் திருநெல்வேலியில் உள்ள சிந்துபூந்துறை என்னுமிடத்தில் பிறந்தார். [1] தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகள் பெயரை இவருக்கு இவர்தம் பெற்றோர் இட்டனர்.

கல்வி

மறைமலை தனது தொடக்கக் கல்வியை தன் தந்தையார் பணியாற்றிய ஊர்களில் எல்லாம் பெற்றார். அப்பள்ளிகளின் பட்டியல் வருமாறு: [2]


பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்று 1962-1963ஆம் கல்வி ஆண்டில் புகுமுக வகுப்பில் (Pre University Course) தேறினார். [3] அக்கல்லூரியிலேயே தொடர்ந்து பயின்று 1966ஆம் ஆண்டில் விலங்கியல் சிறப்புப் பாடத்தில் அறிவியல் இளவல்(Bachelor of Science) பட்டம் பெற்றார். [4] மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பயின்று 1969ஆம் ஆண்டில் கலைமுதுவர் (Master of Arts) பட்டம் பெற்றார்.

வடமொழியில் பயின்று 1977ஆம் ஆண்டில் பட்டயம் (Diploma in Sanskrit) பெற்றார்.

இக்காலத் தமிழில் சொல்லாக்கம் - ஆட்சித்துறைச் சொற்களில் ஒரு சிறப்பாய்வு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து 1984ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் (Doctor in Philosophy) பெற்றார்.

எண்மக் காணொளி படைப்பாக்கத்தில் (Diploma in Digital Video Production) 2006ஆம் ஆண்டில் பட்டயம் பெற்றார்.

பணி

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கலைக் கல்லூரி (4 - செப்டம்பர் - 1969ஆம் நாள் முதல் 1971 வரை), கிருட்டிணகிரி அரசு கலைக்கல்லூரி (1971 - 1974) ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். சூன் 1974 முதல் 31 - மே - 2005 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த் துறை விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இடையில் 1997-98 ஆம் கல்வியாண்டில் அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் தெற்கு, தென்கிழக்காசியவியல் ஆய்வுத்துறையின் (Department of South and Southeast Asian Studies) தமிழ்ப்புலத்தில் சிறப்பு வருகைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.


இதழாசிரியர்

பேராசிரியர் சி. இலக்குவனார் நடத்திய குறள்நெறி இதழின் பொறுப்பாசிரியராகவும், ஆசிரியராகவும் திகழ்ந்தார். தற்பொழுது செம்மொழிச் சுடர் என்னும் மின்னிதழின் ஆசிரியராகத் திகழ்கிறார்.

சொற்பொழிவாளர்

சொற்பொழிவாளர் மறைமலை இலக்குவனார்

உலகத் தமிழ் மாநாடுகள் உட்பட பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரைச் சொற்பொழிவாற்றி உள்ளார். தற்பொழுது சென்னை பாரிமுனையில் அமைந்திருக்கும் இளம் கிறித்துவ ஆடவர் ஆணையத்தின் (Y.M.C.A) பொறுப்பில் நடைபெறும் ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் என்னும் இலக்கிய அமைப்பின் வழியாக வாழும் கவிஞர்களின் படைப்புகளைப் பற்றிய திறனாய்வுச் சொற்பொழிவை திங்கள்தோறும் 1995ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார்.

சென்றுள்ள நாடுகள்

பேராசிரியர் தமிழ்ப்பணி ஆற்றுவதற்காக அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், சப்பான், மோரிசியசு, ஆத்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.

புகழுரைகள்

  • சிந்திக்கும் திறமும் சீர்திருத்தத் திருவும் கொண்டு நுண்ணிய நூல்களை ஆராய்ந்து நுழைபுலத்தோடு தான் எண்ணியவாறு எழுதும் திறர்தேர்திறம் டாக்டர் மறைமலைக்குக் கைவந்த கலையாக அமைகிறது - டாக்டர் ஒளவை து. நடராசன் [5]
  • அயல்நாட்டாராலும் போற்றத்தகும் புலமையும் பிறர் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகம் வணங்கச் செய்யும் தமிழ் வளமையும் மிக்க அருந்தமிழ்ச் சான்றோர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார். – இளவல் [6]

படைப்புகள்

  • இலக்கியக்கொள்கை - 1977
  • இலக்கியத்திறனாய்வு ஓர் அறிமுகம் - 1979
  • புதுக்கவிதையின் தேக்கநிலை - 1986
  • புதுக்கவிதை முப்பெரும் உத்திகள் - 1986
  • இலக்கியமும் சமூகவியலும் - 1992
  • இலக்கியமும் உளவியலும் - 1992
  • சமூகவியல் நோக்கில் புதுக்கவிதை - 1992
  • இலக்கியமும் மார்க்ஸியமும் - 1995
  • பெண்ணியத் திறனாய்வு - 1995
  • சொல்லாக்கம் - 2002
  • அங்கதத்திற்கொரு தமிழன்பன் - 2003
  • திறனாய்வுச்சுடர் - 2004
  • சி.இலக்குவனார் - 2006
  • வைரமுத்துவின் வைகறை மேகங்கள் - 2001
  • உலகப்பேராசான் மு.வரதராசன் - 2012
  • தலைகீழ் - 2012
  • A Cluster of Stars - 2006

மேற்கோள்கள்

  1. மீண்டும் கவிக்கொண்டல் இதழ், நவம்பர் 2011, பக்கம் 20
  2. மறைமலை இலக்குவனார் தனது முகநூல் சுவற்றில் 2013 - 09 - 05 ஆம் நாள் - ஆசிரியர் நாள் - எழுதிய குறிப்பு
  3. http://www.facebook.com/maraimalai.ilakkuvanar/info
  4. பேராசிரியர் மறைமலை 27.02.2013ஆம் நாள் அரிஅரவேலனுக்கு அனுப்பிய மின்னஞ்சல்
  5. சமூகவியல் நோக்கில் புதுக்கவிதை நூலின் பின்னட்டை
  6. மீண்டும் கவிக்கொண்டல் இதழ், நவம்பர் 2011, பக்கம் 19

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மறைமலை_இலக்குவனார்&oldid=5460" இருந்து மீள்விக்கப்பட்டது