முத்து
| முத்து | |
|---|---|
| படிமம்:Various pearls.jpg பலவிதமான முத்துக்கள் | |
| பொதுவானாவை | |
| வகை | கனிமம் |
| வேதி வாய்பாடு | CaCO3 |
| இனங்காணல் | |
| நிறம் | வெள்ளை, pink, silver, cream, பழுப்பு, பச்சை, நீலம், கருப்பு, மஞ்சள், ஊதா |
| பிளப்பு | இல்லை |
| மோவின் அளவுகோல் வலிமை | 2.5–4.5 |
| கீற்றுவண்ணம் | வெள்ளை |
| ஒப்படர்த்தி | 2.60–2.85 |
| நிறப்பிரிகை | none |
| புறவூதா ஒளிர்தல் | weak, cannot be evaluated. Genuine black p .: Red to reddish River-p.: Strong: pale green |

முத்து (Pearl) என்பது ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் ஒருவகைப் பொருளாகும். இது இயற்கையில் நீரில் வாழுகின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த முத்துச் சிப்பி போன்ற சில உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றது. மிகப் பழங் காலத்திலிருந்தே முத்து விரும்பி வாங்கப்படும் ஒன்றாக இருந்து வந்துள்ளது. தமிழகத்திலும் பண்டையப் பாண்டிநாடுமுத்துக்களுக்குப் பெயர் பெற்றது. அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் முத்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது அறியப்பட்டுள்ளது.[சான்று தேவை] முத்து பொதுவாக ஒரு இரத்தினக் கல்லாகவே கருதி மதிக்கப்படுகிறது.
முத்து இருவாயில் (bivalve) மெல்லுடலி உயிரினங்கள் சிலவற்றின் உடலினுள் உருவாகின்றன. வெளியிலிருந்து இவ்வுயிரினங்களின் உடலுக்குள் செல்லும் நுண்துகள்களினால் ஏற்படும் உறுத்தலைக் குறைப்பதற்காக இவற்றிலிருந்து சுரக்கும் ஒருவகைப் பொருள் அத்துணிக்கைகளின் மீது பூசப்படுகின்றது. இச் செயற்பாடே முத்து எனும் இந்தப் பெறுமதி வாய்ந்த பொருளை உருவாக்குகின்றது. இவ்வாறு சுரக்கப் படுகின்ற பதார்த்தம் அரகோனைட்டு அல்லது [கல்சைட்போன்ற படிக வடிவிலுள்ள கால்சியம் கார்பனேட்டையும், கொன்சியோலின் எனப்படும் ஒரு வகைப் பசை போன்ற கரிம வேதிப்பொருள் ஒன்றையும் கொண்ட கலவையாகும். நேக்கர் (nacre) அல்லது முத்தின் தாய் என அழைக்கப்படும் இப்பொருள் பல படைகளாக வெளித் துணிக்கை மீது பூசப்படுகின்றது.முத்து அரிதாகக் கிடைக்கக்கூடிய விலைமதிப்புள்ள நவரத்தினங்களில் ஒன்று.பெர்சிய வளைகுடா,செங்கடல்,கட்ச் வளைகுடா,மன்னார் வளைகுடா,பாக் ஜல சந்தி பாேன்ற பல இடங்களில் விரவி காணப்படுகின்றது.இந்தியாவில் காணப்படும் பியுஃபிகடா இனமே வணிக முக்கியத்துவம் வாய்ந்தது.முத்துபடுகைகளிலிருந்து ஆயிரக்கணக்கான சிப்பிகள் எடுக்கப்படுகின்றன.ஒவ்வாெரு சிப்பிக்குள்ளும் ஒரு முத்து உருவாகிறது.தூத்துக்குடி பகுதியில் முத்து உற்பத்தி மிக அதிகமாகபதிவு செய்யப்பட்டுள்ளன.பாண்டிய நாடு முத்துடைத்து என்று சாெல்லப்படுவதுண்டு.[1]நம் நாட்டில் முத்து வளர்ப்பு பற்றிய பயிற்சியை சி.எம்.எப்.ஆர்.ஐ வழங்குகிறது.
வரலாறு
19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இயற்கையாக உருவாகும் முத்துக்களே பயன்பட்டன. ஆட்கள் நீருக்குள் இறங்கி முத்துச்சிப்பிகளைச் சேகரிப்பார்கள். இது முத்துக்குளிப்பு எனப்பட்டது. இயற்கை முத்துக்கள் விளையும் இடமாகப் பண்டைக்காலத்திலேயே புகழ் பெற்றிருந்த இடங்கள் பலவுள்ளன. அரேபியக் குடா, இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பல்வேறு பசிபிக் தீவுகள், வெனிசுலா, மத்திய அமெரிக்கா ஆகியவற்றின் கரைகளை அண்டிய கடற் பகுதிகள் இவற்றுள் அடங்குவன.
தமிழ் நாட்டில், தூத்துக்குடி போன்ற கரையோர நகரங்கள் முத்துக்குளிப்புக்குப் பெயர் பெற்றிருந்தன. இலங்கையிலும், யாழ்ப்பாண அரசுக்குள் அடங்கியிருந்த மன்னார்க் குடாப் பகுதியில் முத்துக்குளிப்பு இடம் பெற்றது. யாழ்ப்பாணத்து அரசர்களும், தொடர்ந்து வந்த குடியேற்றவாத ஆட்சியாளர்களான போத்துக்கீசர், ஒல்லாந்தர் முதலியோரும் இதன் மூலம் நல்ல வருவாய் பெற்றுள்ளனர்.
இவ்வாறு சேகரிக்கப்படும் சிப்பிகளில் மிகச் சிலவற்றிலேயே முத்துக்கள் கிடைக்கும். இதனால் முத்து அரிதில் கிடைப்பதொன்றாகவும், விலை கூடியதாகவும் இருந்தது.
1896 இல் ஜப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ என்பவர் செயற்கையாக முத்துக்களை வளர்க்கும் முறையொன்றை விருத்தி செய்து அதற்காக உரிமம் ஒன்றையும் பெற்றுக்கொண்டார். இம்முறையில் முசெல் வகை உயிரினத்தின் ஓட்டிலிருந்து செய்யப்பட்டுப் பளபளப்பாக்கப்பட்ட நுண்துகள் இன்னொரு முத்துச்சிப்பியின் திசுவினால் சுற்றப்பட்டு முத்துச்சிப்பியின் உடலுக்குள் செலுத்தப்படும். இச்சிப்பிகள் ஒரு கூட்டினுள் இடப்பட்டு நீருக்குள் இறக்கப்படும். இவை முத்துக்களை உருவாக்கச் சுமார் மூன்று தொடக்கம் ஆறு ஆண்டுகள் வரை எடுக்கும்.
முத்து உருவாகும் விதம்
சிப்பிக்குள் தோன்றும் கெட்டியான பொருளே முத்து எனப்படுகிறது. கடலில் காணப்படும் முத்துச் சிப்பியினுள் சிறிய திண்மப் பொருளொன்று புகுந்து கொண்டால் உயிருள்ள அந்தச் சிப்பி தன் புறத்தோல் அடுக்காகிய எபிதீலியம் என்னும் படலத்தால் அதை நன்கு பொதிகின்றது. நாளடைவில் அச்சிப்பியில் சுரக்கும் திரவம் மெல்லிய அடுக்குகளாக அதன் மீது படிந்து முத்தாக மாறுகிறது.
முத்தில் காணப்படும் பிரதான மூலகங்களாவன ஆர்கனைட்டு, காண்கியோலின், நீர் என்பனவாகும். முத்து உருவாகும் போது மெல்லிய அடுக்குகள் பொதியப்படுவதினால் அது ஒளியை உட்பிரவேசிக்கவும் பிரதிபலிக்கவும் ஏற்ற தன்மையுடையதாகக் காணப்படுகின்றது. இதனால் சாதாரண முத்துக்கள் கூட பார்ப்பதற்கு மிகவும் ஒளிர்வுடையதாகத் தோன்றுகின்றன. கறுப்பு நிறமான முத்துக்களும் மிக அருமையாகக் காணப்படுகின்றன. இவ்வகையான முத்துக்களுக்குத் தேவை அதிகம்.[2]
கடலுக்குள் ஓடுகள் பெற்றுள்ள உயிரினங்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. இவற்றில் ஒன்றுதான் முத்துசிப்பி. சிப்பிகளிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. 2.5 செ.மீ., முதல் ஒரு மீட்டர் வரை வளரக்கூடியவை. சிப்பிகளின் ஓடு இரு பகுதிகளானது.
முத்துக்களும் தரமும்
முட்டை வடிவிலான முத்துக்கள் பொதுவாகத் தென்பட்டாலும் உருண்டையான தோற்றமுடைய முத்துக்களுக்கே மதிப்பு அதிகம். தூசி, மிதமிஞ்சிய வெப்பம், ஈரலிப்புத்தன்மை போன்றவற்றினால் முத்து பழுதுறும் வாய்ப்பு ஏற்படலாம்.
இயற்கை முத்துகள்
அவிகுலிடி சிப்பிகளிலும் யூனியனி என்னும் மட்டிகளிலும் உற்பத்தியாகும் முத்துக்கள் இயற்கை முத்துக்கள் ஆகும்.
வளர்ப்பு முத்துகள் [3]
சிப்பியின் உட்புறம் முத்துப்போல் அழகான மெல்லிய பொருள் ஒன்றினால் மூடியிருக்கும். இதை நேக்கர் என்பர். அந்த நேக்கரினால் உருவாக்கிய மணியை உயிருள்ள முத்துச் சிப்பியின் திசுவிற்கும் சிப்பிக்குமிடையே கவனமாக திணிப்பார்கள். அவ்வாறு திணிக்கப்பட்ட சிப்பிகளை கூண்டு ஒன்றினுள் வைத்து நீரில் பாதுகாப்பாக அமிழ்த்திவிடுவார்கள். நாளடைவில் மணிகள் பொதிக்கப்பட்டு முத்துக்கள் உருவாகும். தோற்றத்தில் பெரிய முத்துக்கள் பெறுவதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
இவ்வாறு பெறப்படும் முத்துக்கள் செயற்கை முத்துக்கள் எனப்படும். இந்த அரிய முறையை ஜப்பானியர் ஒருவர் 1804 ஆம் ஆண்டு கண்டு பிடித்தார். முத்துக்களின் தரத்தை எக்ஸ்-கதிர் எண்டாஸ் கோப் என்னும் கருவியின் மூலம் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம்.
சில வகை மீன்களின் செதில்களைக் கொண்டு முத்துச்சாறு (Pearlessence) உற்பத்தி செய்யப்படுகின்றது. அதை ஊன் பசையுடன் கலந்து கண்ணாடி மணிகள் மீது அவற்றைப் பூசி முத்துக்கள் தயாரிக்கின்றனர். முத்துக்களின் நிறை அதிகமாகக் காணப்படுவதற்காக சில தொழில்நுட்ப யுக்திகளும் பயன்படுத் தப்படுகின்றன.
ஜப்பான் நாட்டில் முத்துக் குளிக்கும் பெண்கள் அதிகம். அவர்கள் விளைந்த முத்துக்களையும் விளையாத முத்துக்களையும் அள்ளிக்கொண்டு வருவர். அவற்றில் மூன்று வயது நிரம்பிய ஆரோக்கியமான முத்துக்களை எடுத்து அவற்றைச் செயற்கை முத்து வளர்க்கப் பயன்படுத்துவர். முத்துக்களை முதலில் உப்பில்லாத நன்னீரில் போட்டு அவற்றை வலிமை இழக்கச் செய்வர். பின்னர் மரக் கத்தியால் அதனைப் பிளந்து அதற்குள் முத்துக் கருவைப் போடுவர். முத்துக்கரு என்பது உயிரணு போன்றது அன்று. சிப்பிக்கு அன்னியமான ஒரு பொருள். அதாவது சிறு முத்துச்சிப்பி துரும்பு. உள்ளே நுழைந்த பொருள் தன்னைத் துன்புறுத்திவிடக் கூடாது என்பதற்காக முத்துச்சிப்பி ஒருவகை நீர்மத்தைச் சுரக்கும். இந்த நீர்மந்தான் உருண்டு திரண்டு முத்தாக மாறும். இவ்வாறு கருவூட்டப்பட்ட முத்துச்சிப்பிகளை அதற்கெனத் தயாரிக்கப்பட்ட வலைகளில் போட்டு மீண்டும் கடலில் இட்டு ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை வளர்ப்பர். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முத்துச் ணிப்பியின் ஓட்டைச் சுரண்டி தூய்மை செய்வர். ஏழு ஆண்டுகள் வளர்ந்த முத்துக்களைத் தரம் பிரித்து விலை நிர்ணயம் செய்வர். [4]
முத்தின் தரம்
இயற்கை முத்துக்களும், செயற்கையாக வளர்க்கப்படும் முத்துக்களும் உயிரினங்களால் உருவாக்கப்படுபவை. இதனால் தொழிற்சாலைகளில் உருவாகும் பொருட்களைப்போல் ஒரே சீரான இயல்புகளைக் கொண்டிராது. கிடைக்கும் முத்துக்களின் சில இயல்புகள் விரும்பத்தக்கவை. சில விரும்பத்தகாதவை. ஒவ்வொரு முத்தும் இத்தகைய பல்வேறு விரும்பத்தக்க, விரும்பத்தகாத இயல்புகளின் கலவையாகவே காணப்படுகின்றன. இக் கூட்டு இயல்புகளைப் பொறுத்தே முத்தின் தரம் தீர்மானிக்கப்படுகின்றது. முத்துக்களின் தரம் பின்வரும் இயல்புகளில் தங்கியுள்ளது.
- வகை
- நேக்கரின் (nacre) தடிப்பு
- ஒளிர்வுத் தன்மை (luster)
- மேற்பரப்பின் தன்மை
- வடிவம்
- நிறம்
- அளவு
முத்துக்களின் வகைகள்
முத்துக்கள் நன்னீரில் உருவானவையா, கடல் நீரில் உருவானவையா, அவற்றை உருவாக்கிய முத்துச்சிப்பி வகை, உருவான பிரதேசம் என்பவற்றைப் பொறுத்து முத்துக்களின் இயல்புகள் வேறுபடுகின்றன. முத்துக்களில் பின்வரும் வகைகள் உள்ளன:
சிலவகைகள் அரிதாகவே கிடைக்கின்றன இதனால் அவற்றின் மதிப்பும் அதிகம்.
நேக்கரின் தடிப்பு
சிப்பியின் உட்புறம் முத்துப்போல் காணப்படும் அழகான மெல்லிய பொருள் நேக்கர் ஆகும். எனவே நேக்கரின் நிறம், ஒளிர்வு என்பனவே முத்தின் இயல்புகளாகவும் வெளிப்படுகின்றன. நேக்கரின் தடிப்பு அதிகரிக்கும்போது முத்தின் மதிப்பும் கூடுகின்றது.
ஒளிர்வுத் தன்மை
ஒளிர்வுத் தன்மை என்பது முத்தின் ஒளிர்வினதும் அதன் ஒளிதெறிக்கும் தன்மையினதும் அளவீடு ஆகும். நல்ல ஒளிர்வும், முகம் தெரியக்கூடிய அளவு பளபளப்பும் கொண்டது முதல் மங்கலான சொரசொரப்பானது வரையான தன்மைகளைக் கொண்ட முத்துக்கள் உள்ளன. கூடிய ஒளிர்வும், பளபளப்பும் கொண்ட முத்துக்கள் தரம் கூடியவை.
தரம்பிரிக்கும் முறைகள்
முத்துக்களைத் தரம் பிரிப்பதற்குப் பல முறைகள் புழக்கத்தில் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை இரண்டு அவை AAA-A முறை, A-D முறை அல்லது தாகித்தியன் முறை என அழைக்கப்படுகின்றன.
AAA-A முறையில் முத்துக்கள் அவற்றின் தரத்திற்கேற்ப AAA, AA, A என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் AAA மிகக் கூடிய தரமான முத்துக்களையும், A மிகக் குறைந்த தரத்தையும் குறிக்கும்.
A-D முறையில் முத்துக்கள் A, B, C, D எனத் தரப்படுத்தப்படுகின்றன. இங்கே A அதி கூடிய தரமும், D குறைவான தரமும் கொண்டவை.
மேற்கோள்கள்
- ↑ பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து - ஔவையார் தனிப்பாடல்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2012-10-01.
- ↑ Cultured pearls
- ↑ தினத்தந்தி, 30-3-2018 - சிறுவர் தங்கமலர், பக்கம் 4
வெளி இணைப்புகள்
- The History of Pearls. PBS Pearl History Special.
- Recover the major pearl produce country by aquaculture in UAE (Japanese page with English narration)