து. மூர்த்தி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Lingam பயனரால் செய்யப்பட்ட 19:16, 21 சனவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search

து. மூர்த்தி (மறைவு : 24. அக்டோபர் 2016 ) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிப் பேராராசிரியர், பெரியாரியலாளர், மாரக்சியலாளர், அம்பேத்கரியலாளர், பேச்சாளர், எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ், மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளை நன்கு கற்றவர். இவர் இளந்தமிழன், கவிதாமண்டலம், சிந்தனையாளன், தினப்புரட்சி, தமிழர் கண்ணோட்டம் போன்ற இதழ்களில் எழுதிவந்துள்ளார்.

பிறப்பும், கல்வியும்

மூர்த்தி தமிழ்நாட்டின், வேலூரில் துரைசாமி, அம்புஜம் இணையருக்கு மகானாக பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை வேலூரில் பயின்றார். புதுமுக வகுப்பை வேலூர் ஊரிசு கல்லூரியில் முடித்தார். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியி்ல் (1968-1973) தமிழிலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் படிப்புகளை முடித்தார். தமிழ் மலையாளப் பொருச்சோற்கள் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

தொழில்

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில் தேவநேயப் பாவாணரிடம் சிலகாலம் பணியாற்றினார். பின்னர் க்ரியா பதிப்பித்த தற்கால தமிழகராதி உருவாக்கத்தில் சிலகாலம் பணியாற்றினார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி இவர் தொழிலாளர்களுக்காக நடத்திய போராட்டத்தால் பணி இழந்தார்.[1] இதன்பின்னர் 1989 அக்டோபரில் அலிகார் முசுலிம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்து, பேராசிரியராக ஆகி, நவீன இந்திய மொழிகள் துறைத்தலைவராக உயர்ந்து பணியாற்றினார்.

பொது வாழ்கை

மூர்த்தி தன் மாணவர் பருவத்தில் திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தவர். பின்னர் மார்கசிய இலெனினிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பொதுவுடமைச் சிந்தனைக்கு மக்களை ஈர்க்க தன் பேச்சாற்றலாலும், எழுத்தாற்றலாலும் பாடுபட்டார். மண்டலக் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த வே. ஆனைமுத்து வட இந்தியப் பயணங்களை மேற்கொண்டபோது அவருக்கு உறுதுணையாக இருந்தார். வே. ஆனைமுத்து தலைமையில் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் 2000 ஆண்டு 31 மாவட்டங்களில் இட ஒதுக்கீட்டு பரப்புரையில் ஈடுபட்டபோது பொதுக்கூட்டங்களில் மூர்த்தி இந்தியில் உரையாற்றி பரப்புரையில் ஈடுபட்டார். இவர் புற்றுநோயால் பாதிக்கபட்டு 24-10-2016 இல் அலிகாரில் மறைந்தார்.[2] பிறகு இவரது உடல் வேலூர் சி. எம். சி மருத்துவக் கல்லூரி மாணவர் ஆய்வுக்காக கொடையாக தரப்பட்டது.[3]

நூல்கள்

  • இக்காலக் கவிதைகள் மரபும் புதுமையும்
  • அச்சத்தினிற்னும் விடுதலை
  • தனிமையில் தவிக்கும் குழந்தைகள்
  • தமிழியல் புதிய தடங்கள்
  • கல்லறை நதி (சிறுகதைத் தொகுப்பு)
  • கைவிட்டவர்களின் மனசாட்சிக் குரலாய் (கவிதைத் தொகுப்பு)
  • அரசியல் சமுதாய நிகழ்வுகள் 1989
  • பெரியார் இன்றும் தேவை

மேற்கோள்கள்

உசாத்துணை நூல்

  • சிந்தனையாளன் பொங்கல் மலர் 2017, தோழர் து. மூர்த்தி, கட்டுரை எழுதியவர் மு. சுவாமிநாதன், வேலூர்
"https://tamilar.wiki/w/index.php?title=து._மூர்த்தி&oldid=89036" இலிருந்து மீள்விக்கப்பட்டது