மணலூர் மணியம்மாள்

மணலூர் மணியம்மை (பிறப்பு: வாளாம்பாள்) என்பவர் தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின், பழைய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீராங்கனை, சாதித் தீண்டாமை எதிர்ப்பாளர், பெண்ணியலாளர், வர்க்கப் போராட்டக்காரர் எனப் பன்முகம் கொண்டவர்.

தொடக்க வாழ்க்கை

மணலூர் மணியம்மை ஒரு பிராமணக் குடும்பத்திலே பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வாளாம்பாள். இவர் தன் இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். குடும்பச் சூழலால் தன்னை விடவும் 20 வயது மூத்த, ஒரு நாகப்பட்டினம் வழக்கறிஞருக்குத் திருமணம் செய்விக்கப்பட்டார். திருமணமான 10 ஆண்டுகளிலேயே கணவனை இழந்து தாய்வீடு வந்து சேர்ந்தார்.

பொதுவாழ்வில்

இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தின்பால் ஈடுபாடு கொண்ட மணியம்மை காந்தி தஞ்சைக்கு வந்த போது அவரைச் சந்தித்து காங்கிரசில் இணைந்தார். மாகாணக் கமிட்டி உறுப்பினர் பதவிவரை உயர்ந்த அவர், பண்ணையடிமை முறையை எதிர்த்து தனது சொந்தப் பகுதியில் போராட்டம் நடத்தினார். தனது சொந்தப் பண்ணையிலேயே சாதி அடிமைத் தனத்தை எதிர்த்துப் போரட்டம் நடத்தியதால் அவர் பண்ணையில் இருந்த சொந்தக் குடும்பத்தினரால் தள்ளி வைக்கப் பட்டார். காலவோட்டத்தில் அல்லது காந்திக்கு பிறகு பண்ணையார்களுக்கே காங்கிரசில் பெரு மதிப்பு என்று உணர்ந்து கொண்டார். ஜனசக்தி இதழ் மூலம் பொதுவுடைமை கொள்கைகளின் பால் ஈடுபாடு கொண்ட மணியம்மை, காங்கிரசில் இருந்து விலகி முழுநேர பொதுவுடமையாளர் ஆனார். பி. சீனிவாசராவ், மணலி கந்தசாமி போன்ற முன்னோடி பொதுவுடமையாளர்கள் மூலம் தனது அரசியல் அறிவை வளர்த்துக் கொண்ட இவர், செல்வாக்கு மிகுந்த தலைவராக உயர்ந்தார். இவரின் பண்ணை அடிமைக்கு எதிரான போராட்டத்தாலும், வர்க்க அணி திரட்டலாலும் பாதிக்கப்பட்டர்கள் ஆத்திரமடைந்து இவரைக் கொல்ல முயன்று, கொடும் தாக்குதலில் காயத்துடன் உயிர் தப்பினார். பெண்மையின் உடை, கூந்தல் போன்ற பல்வேறு குறியீட்டு அம்சங்களைத் துறந்து தனது கூந்தலை வெட்டிக் கொண்டு, ஆண்களைப் போல் வேட்டி சிப்பா அணிந்து கொண்டார்.[1] மேலும் தற்பாதுகாப்புக்கென சிலம்பம் கற்றுத் தேர்ந்தார். வேட்டி சட்டையோடு துணிச்சலாகத் தனி ஒருவராகவே தஞ்சைப் பகுதியெங்கும் சென்று விவசாய இயக்கங்களைக் கட்டி வளர்த்து, எண்ணிலடங்கா விவசாயப் போராட்டங்களில் பங்கெடுத்தார்.

மறைவு

1953 ஆம் ஆண்டு மான் முட்டி இறந்தார்.[2]

பரவலர் பண்பாட்டில்

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் மணியம்மையின் வரலாறை அடிப்படையாக கொண்டு "பாதையில் பதிந்த அடிகளில்" என்ற பெயரில் புதினமாக எழுதியுள்ளார்.[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மணலூர்_மணியம்மாள்&oldid=28133" இருந்து மீள்விக்கப்பட்டது