சு. வேலுப்பிள்ளை

சு. வேலுப்பிள்ளை (சு.வே)
SuVelupillai.jpg
முழுப்பெயர் சுப்பிரமணியம்
சுப்பிரமணியம்
பிறப்பு 24-05-1921
மறைவு 22-06-2007
வெள்ளவத்தை,
கொழும்பு
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
பெற்றோர் தையல்நாயகி,
சுப்பிரமணியம்

சு.வே என அழைக்கப்படும் சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை (24 மே 1921 – 22 சூன் 2007) இலங்கையின் சிறப்புமிக்க உருவகக்கதை எழுத்தாளரும் நாடகாசிரியரும் தமிழ்ப் பண்டிதரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்

வேலுப்பிள்ளை யாழ்ப்பாணம், நாவற்குழியில் சுப்பிரமணியம், தையல்நாயகி ஆகியோருக்குப் பிறந்தவர். ஒரு பயிற்றப்பட்ட தமிழாசிரியராக 1946 முதல் 1981 வரை இலங்கையின் டிக்கோயா, மானிப்பாய், சுன்னாகம் ஆகிய இடங்களில் ஆசிரியப் பணி புரிந்தவர்.

சிறுகதைகள்

சு.வேயின் முதல் சிறுகதை 'கிடைக்காத பலன்' 1943 இல் ஈழகேசரியில் வெளியானது. சு.வே யின் சிறுகதைகள், 'மண் வாசனை', 'பால்காவடி', ஆகிய தலைப்புகளில் தொகுதிகளாக வெளிவந்தன. இவரது உருவகக்கதைகள் 1999 இல் மித்ர வெளியீடாக தொகுப்பாக வெளிவந்தன.

நாடகத்துறை

1965 இல் இலங்கை கலைக்கழகம் நடத்திய நாடகப்போட்டியில் இவரது 'வஞ்சி' என்ற ஓரங்க நாடகம் முதல் பரிசு பெற்றது. அடுத்த ஆண்டும் இவரது 'எழிலரசி' என்ற முழுநீள நாடகம் முதல் பரிசு பெற்றது.

வானொலி நாடகங்கள்

1960 இல் இலங்கை வானொலி நாடகப்போட்டியில் இவரது 'மண் வாசனை'க்கு முதல் பரிசு கிடைத்தது. 1968 இல் 'ஒருமை நெறித்தெய்வம்' என்ற நாடகம் பரிசு பெற்றது. சு.வே வானொலி கிராம சேவைக்கு பல வானொலித் தொடர் நாடகங்களையும் எழுதினார்.

  • ஏட்டிலிருந்து (1964) - 14 வாரங்கள்
  • கிராமராஜ்யம் (1964) - 32 வாரங்கள்
  • பொன்னாச்சிக் குளம் (1967-68) -97 வாரங்கள்
  • நவயுகம் (1969)- 12 வாரங்கள்

வெளிவந்த நூல்கள்

  • மண் வாசனை - (12 சிறுகதைகளின் தொகுதி)
  • பாற் காவடி - சிறுகதைத் தொகுதி
  • மணற்கோவில் - உருவகக் கதைகள் (மித்ர பதிப்பகம்)
  • சிறுவர் கதை இலக்கியம்

செங்கை ஆழியான் தொகுத்து வெளியிட்ட ஈழகேசரி சிறுகதைகள், மறுமலர்ச்சி சிறுகதைகள் ஆகிய தொகுப்புகளில் இவருடைய சிறுகதைகள் சில இடம்பெற்றுள்ளன.

"https://tamilar.wiki/index.php?title=சு._வேலுப்பிள்ளை&oldid=2643" இருந்து மீள்விக்கப்பட்டது