அழகிய பெரியவன்

அழகிய பெரியவன் (Azhagiya periyavan) தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராவார்.நாவல் , சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

அழகிய பெரியவன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
அழகிய பெரியவன்
Azhagiya periyavan
பிறந்ததிகதி 03.03.1968
பிறந்தஇடம் இல.மாங்குப்பம், ஆம்பூர், வேலூர் மாவட்டம்
தேசியம் இந்தியர்
குடியுரிமை இந்தியா
கல்வி நிலையம் பேரணாம்பட்டு, ஆம்பூர், வேலூர்
குறிப்பிடத்தக்க விருதுகள் தமிழக அரசின் சிறந்த நாவல், சிறந்த கவிதை நூல் பரிசுகள், திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, கலை இலக்கிய பெருமன்ற பரிசு, தலித்முரசு கலை இலக்கிய விருது, கணையாழி குறுநாவல் பரிசு உட்பட மேலும் பல பரிசுகளும் விருதுகளும்.


ஆசிரியராகப் பணிபுரியும் இவர் ஒரு மேடைப் பேச்சாளராகவும் புகழப்படுகிறார். தெளிந்த அரசியல் புரிதலுடன் தலித் மக்களின் பிரச்சினைகளை எழுதும் படைப்பாளிகளில் முக்கியமானதொரு படைப்பாளியாக இவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். தமிழில் வெளிவரும் பல முன்னணி பத்திரிகைகளிலும் இலக்கிய இதழ்களிலும் இவரது படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

தான் எழுதிய ‘தகப்பன் கொடி’ என்ற புதினத்திற்காக 2003 ஆம் ஆண்டும், 'உனக்கும் எனக்குமான சொல்' என்ற கவிதை நூலுக்காக 2010 ஆம் ஆண்டும் இரண்டு முறை தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார். இவருடைய பல கதைகளும் கவிதைகளும் ஆங்கிலம், செக், இந்தி, உருது, வங்காளம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. மலையாள மொழியில் அழகிய பெரியவனின் இரண்டு நூல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஒவ்வொரு விரலிலும் உலகம் என்ற தொடரை இவர் எழுதிக்கொண்டிருக்கிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் வழங்கப்படும் மறைந்த முதல்வர் கருணாநிதி பெயரிலான 2023 ஆம் ஆண்டுக்கான கலைஞர் பொற்கிழி விருது இவருக்கு அளிக்கப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு

அழகிய பெரியவன் 1968 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் நாள் சின்னதுரை கமலம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எழுத்தாளர் நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர் நாவலைப் படித்த இவரது தாய்மாமா அப்புதினத்தின் நாயகனான அரவிந்தனின் பெயரை இவருக்கு வைத்துள்ளார். இப்பெயரே அழகிய பெரியவனின் இயற்பெயராகும்.

கல்வி

பேரணாம்பட்டுக்கு அருகில் உள்ள சாத்கர் என்ற கிராமத்தில் இருக்கும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இவர் ஐந்தாம் வகுப்பு வரையில் படித்தார். பின்னர் ஆம்பூரில் உள்ள தேவலாபுரம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும் தொடர்ந்து ஆம்பூரில் இருக்கும் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை பள்ளி வகுப்பு வரையிலும் படித்தார். விலங்கியல் இளம் அறிவியல் பட்டப்படிப்பை வேலூரில் இருக்கும் ஊரிசு கல்லூரியில் படித்து முடித்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்டமும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் பட்டமும் பெற்றார். தற்பொழுது வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஒன்றியத்தைச் சேர்ந்த சாரங்கல் கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

எழுத்துலக அறிமுகம்

மேல்நிலைப்பள்ளி வகுப்பில் படித்து கொண்டிருந்த காலத்திலேயே சில சிறுகதைகளை எழுதிப் பார்த்த அழகிய பெரியவன் கல்லூரி காலத்தில் தீவிரமாக எழுத ஆரம்பித்துள்ளார். நிழல் என்ற பெயரில் கையெழுத்து இதழ் ஒன்றையும் நடத்தியிருக்கிறார். கூடடையும் பறவைகள் என்ற தலைப்பில் இவர் எழுதிய சிறுகதை முதன்முதலாக 1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தாமரை இதழில் வெளிவந்தது. தீட்டு என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு 2000 ஆம் ஆண்டில் தமிழினி பதிப்பக வெளியீடாக வெளியானது. 2002 ஆம் ஆண்டில் தகப்பன் கொடி என்ற முதல் நாவல் வெளிவந்து பல பரிசுகளை வென்றது. 14 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் வல்லிசை என்ற இரண்டாவது நாவல் வெளிவந்தது. தன்னைச் சூழ்ந்துள்ள சமூகத்தின் நிகழ்வுகளால் உந்தப்பட்டு, அவ்வனுபவங்களை எதார்த்தமான சொல்லாடலால் கலைநயமிக்க படைப்புகளாக உருவாக்குவதால் அழகிய பெரியவன் தனித்துவம் பெறுகின்றார்.

எழுதிய நூல்கள்

சிறுகதை

  1. தீட்டு
  2. அழகிய பெரியவன் கதைகள்
  3. நெரிக்கட்டு
  4. கிளியம்மாவின் இளஞ்சிவப்புக்காலை
  5. சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்
  6. குறடு
  7. திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம்
  8. அழகிய பெரியவன் சிறுகதைகள்
  9. அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டார்
  10. அன்றாடம்

கவிதை

  1. நீ நிகழ்ந்தபோது
  2. அரூப நஞ்சு
  3. ஞாபக விலங்கு
  4. உனக்கும் எனக்குமான சொல்

நாவல்

  1. தகப்பன் கொடி
  2. வல்லிசை
  3. யாம் சில அரிசி வேண்டினோம்
  4. சின்னக்குடை

கட்டுரை

  1. வெட்கம் கெட்ட நாடு
  2. மூடிய முகங்களில்
  3. கம்பளிப்பூச்சி இரவு
  4. பெருகும் வேட்கை
  5. மீள்கோணம்
  6. தேநீர் மேசை
  7. வகுப்பறையில் சாதி
  8. மறைத்துப்பேச என்ன இருக்கு

விருதுகளும் பரிசுகளும்

  1. 1995 - தினமணி – ஆக்சசு கவிதைப் பரிசு
  2. 1997 - கணையாழி குறுநாவல் பரிசு
  3. 1999 – கணையாழி சம்பா நரேந்தர் குறுநாவல் பரிசு
  4. 2001 - திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
  5. 2002 – கலை இலக்கியப் பெருமன்ற பரிசு, தலித்முரசு கலை இலக்கிய விருது
  6. 2003 – கலை இதழ் பரிசு, தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு, பொ.மா. சுப்பிரமணியம் அறக்கட்டளை விருது
  7. 2005 – இந்தியா டுடேவின் எதிர்கால நாயகர் விருது, தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறுகதை பரிசு
  8. 2010 – தமிழக அரசின் சிறந்த கவிதை நூல் பரிசு, சிற்பி இலக்கியப் பரிசு, த.மு.எ.ச வின் சிறந்த குறும்பட கதையாசிரியர் பரிசு
  9. 2011 – சு.சமுத்திரம் நினைவு சிறுகதை விருது
  10. 2013 – பெரியார் விருது, தமிழ் விருது.
  11. 2018 – கு. அழகிரிசாமி சிறுகதை விருது, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வழங்கிய The Vibrant Voice of the Subalterns என்ற பட்டம்.

பிற சிறப்புகள்

  1. பதினைந்துக்கும் மேற்பட்டோர் அழகிய பெரியவனின் படைப்புகளை ஆய்வு செய்து எம்.பில் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் கேரளாவிலுள்ள பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இவரது கதைகளும் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.
  2. தமிழக அரசின் காவலர் பயிற்சியில் பாலின நிகர்நிலை கருத்தாளராக ஓர் ஆண்டுகாலமும், தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நிதிச்செலவு புரிந்துணர் குழுவின் கருத்தாளராக ஓர் ஆண்டும், மத்திய அரசின் தொலைபேசித் துறையில் வேலூர் மாவட்ட ஆலோசணைக்குழு உறுப்பினராக ஓராண்டும் பணிபுரிந்திருக்கிறார்.
  3. 2009 ஆம் ஆண்டு பொன் சுதாவின் இயக்கத்தில் அழகிய பெரியவனின் குறடு என்ற சிறுகதை நடந்த கதை என்ற பெயரில் குறும்படமாக எடுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு அரிகரசுதன் இயக்கத்தில் வெளியிடப்பட்ட கண்காணிக்கும் மரணம் என்ற குறும்படத்திற்கு இவர் கதை, வசனம், திரைக்கதை பொறுப்புகள் வகித்தார். 2017 ஆம் ஆண்டு அம்சன் குமார் இயக்கிய மனுசங்கடா என்ற திரைப்படத்தின் திரைக்கதைக்கு அழகிய பெரியவன் பங்களித்துள்ளார்.
  4. தலித்முரசு, காக்கைச் சிறகினிலே மாத இதழ்களின் ஆசிரியர் குழுவில் உறுப்பினராகவும், நம்நற்றிணை காலாண்டு இலக்கிய இதழின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் அழகிய பெரியவன் இதழியல் பணிகளிலும் பங்கெடுத்து இயங்கி வருகிறார்.

மேற்கோள்கள்

மேலும் வாசிக்க

  • Satyanarayana, K & Tharu, Susie (2011) No Alphabet in Sight: New Dalit Writing from South Asia, Dossier 1: Tamil and Malayalam, New Delhi: Penguin Books.

புற இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அழகிய_பெரியவன்&oldid=3105" இருந்து மீள்விக்கப்பட்டது